பாடல் #1639

பாடல் #1639: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கு முனிவ னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்றவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒதது மிகவு நினறானை யுரைபபது
பததி கொடுககும பணிநதடி யாரதொழ
முததி கொடுககு முனிவ னெனுமபதஞ
சததான செயவது தானறவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்து ஆன செய்வது தான் தவம் தானே.

பதப்பொருள்:

ஒத்து (தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும்) மிகவும் (பேரான்மாவாக மிகுந்து) நின்றானை (தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின்) உரைப்பது (புகழ்களை தாம் போற்றி உரைப்பது)
பத்தி (பக்தியை) கொடுக்கும் (கொடுக்கும்) பணிந்து (அதனுடன் பணிவும் சேர்ந்து) அடியார் (அடியவர்கள்) தொழ (இறைவனை தொழும் போது)
முத்தி (அதுவே முக்தியையும்) கொடுக்கும் (கொடுப்பதற்கு காரணமாகிய) முனிவன் (முனிவன்) எனும் (என்கின்ற) பதம் (பக்குவத்தில்)
சத்து (தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு) ஆன (சிறப்பாக) செய்வது (செய்வது) தான் (தான்) தவம் (தவத்தை) தானே (தானாகவே கொடுக்கும்).

விளக்கம்:

தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும் பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களை தாம் போற்றி உரைப்பது பக்தியை கொடுக்கும். அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனை தொழும் போது முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாக செய்வது முக்தியை கொடுப்பதற்கு காரணமாகிய தவத்தை தானாகவே கொடுக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.