பாடல் #1687

பாடல் #1687: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்
விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விடிவ தறியார வெளிகாண மாடடார
விடியில வெளியில விழிககவு மாடடார
கடியதொ ருனனிமை கடடுமின காணமின
விடியாமைக காககும விளககது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உன்னி மை கட்டுமின் காண்மின்
விடியாமைக்கு ஆக்கும் விளக்கு அது ஆமே.

பதப்பொருள்:

விடிவது (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை) அறியார் (அறிய மாட்டார்கள்) வெளி (அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை) காண (பார்க்க) மாட்டார் (மாட்டார்கள்)
விடியில் (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில்) வெளியில் (தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை) விழிக்கவும் (காணவும்) மாட்டார் (மாட்டார்கள் அபக்குவர்கள்)
கடியது (அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற) ஓர் (ஒரு இறை சக்தியில்) உன்னி (மனதை வைத்து தியானித்து) மை (மாயையை) கட்டுமின் (கட்டுங்கள்) காண்மின் (அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள்)
விடியாமைக்கு (இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு) ஆக்கும் (உங்களை கொண்டு செல்லும்) விளக்கு (ஜோதி) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை பார்க்க மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில் தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்து தியானித்து மாயையை கட்டுங்கள். அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.