பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

பாடல் #1714

பாடல் #1714: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியு
மாகமு மாறாறு தத்துவத் தப்பாலா
மேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவ
மாகம தத்துவா வாற்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொகமு முததியும புததியுஞ சிததியு
மாகமு மாறாறு தததுவத தபபாலா
மெகமு நலகி யிருககுஞ சதாசிவ
மாகம தததுவா வாறசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்
ஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே.

பதப்பொருள்:

போகமும் (வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும்) முத்தியும் (அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும்) புத்தியும் (இறைவனை அறிவதற்கான ஞானத்தையும்) சித்தியும் (அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்)
ஆகமும் (உடலையும் மனதையும் இயக்குகின்ற) ஆறு (ஆறும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு) தத்துவத்து (தத்துவங்களையும்) அப்பால் (கடந்து) ஆம் (இருக்கின்ற)
ஏகமும் (அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும்) நல்கி (உயிர்களுக்கு கொடுத்து அருளி) இருக்கும் (இருக்கின்ற பரம் பொருளே) சதா (சதா) சிவம் (சிவமாகும்)
ஆகம (அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள்) தத்துவா (அருளுகின்ற தத்துவங்களாக) ஆல் (இருக்கின்ற இலிங்கமே) சிவம் (சிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் உள்ளபடி) கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

பாடல் #1713

பாடல் #1713: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

உலகி லெடுத்தது சத்தி முதலா
யுலகி லெடுத்தது சத்தி வடிவா
யுலகி லெடுத்தது சத்தி குணமா
யுலகி லெடுத்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலகி லெடுததது சததி முதலா
யுலகி லெடுததது சததி வடிவா
யுலகி லெடுததது சததி குணமா
யுலகி லெடுதத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்
உலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்
உலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்
உலகில் எடுத்த சதா சிவன் தானே.

பதப்பொருள்:

உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) முதல் (மூல காரணம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) வடிவு (வடிவம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) குணம் (தன்மை) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்த (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே) சதா (அசையா சக்தியாகிய) சிவன் (சிவப் பரம்பொருளின்) தானே (அடையாளமாகிய இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.

பாடல் #1712

பாடல் #1712: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

இலிங்கம தாகுவ தாரு மறியா
ரிலிங்கம தாவது எண்டிசை யெல்லா
மிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையு
மிலிங்கம தாக வெடுத்த துலகே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙகம தாகுவ தாரு மறியா
ரிலிஙகம தாவது எணடிசை யெலலா
மிலிஙகம தாகுவ தெணணெண கலையு
மிலிஙகம தாக வெடுதத துலகே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

பதப்பொருள்:

இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (எதுவாக இருக்கின்றது என்பதை) ஆரும் (யாரும்) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆவது (ஆக இருப்பது) எண் (எட்டு) திசை (திசைகளில்) எல்லாம் (உள்ள அனைத்தும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (ஆக இருப்பது) எண் (எட்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) கலையும் (கலைகளும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆக (ஆகவே) எடுத்தது (இறைவன் தமது அடையாளமாக) உலகே (அனைத்து உலகங்களும் உருவாக்கினான்).

விளக்கம்:

இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.

பாடல் #1711

பாடல் #1711: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆயு மலரி னணிமலர் மேலது
மாய விதழும் பதினாறு மங்குள
தூய வறிவு சிவானந்த மாகிப்போய்
மேய வறிவாய் விளைந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயு மலரி னணிமலர மெலது
மாய விதழும பதினாறு மஙகுள
தூய வறிவு சிவானநத மாகிபபொய
மெய வறிவாய விளைநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயு மலரின் அணி மலர் மேல் அதும்
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவ ஆனந்தம் ஆகி போய்
மேய அறிவு ஆய் விளைந்தது தானே.

பதப்பொருள்:

ஆயு (உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது) மலரின் (ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும்) அணி (அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள்) மலர் (அந்த மலர்களின்) மேல் (மேல்) அதும் (இருக்கின்றது)
ஆய (இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின்) இதழும் (இதழ்களும்) பதினாறும் (பதினாறு கலைகளும்) அங்கு (அங்கேயே) உள (உள்ளது)
தூய (இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற) அறிவு (அறிவானது) சிவ (இறைவனது) ஆனந்தம் (பேரின்பத்தை தாங்குகின்ற) ஆகி (பாத்திரமாக ஆகி) போய் (விடுகின்றது)
மேய (அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது) அறிவு (பேரறிவு) ஆய் (ஆக) விளைந்தது (விளைய வைப்பதற்கு) தானே (இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன).

விளக்கம்:

உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றது. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும் பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளது. இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது இறைவனது பேரின்பத்தை தாங்குகின்ற பாத்திரமாக ஆகி விடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவு ஆக விளைய வைப்பதற்கு இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.

பாடல் #1710

பாடல் #1710: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்
போகு முடம்பும் பொருந்திய வாறுதா
னாகிய வக்கர மைம்பது தத்துவ
மாகு முடம்புக்கு மாறந்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகு முடமபு மழிககினற வவவுடல
பொகு முடமபும பொருநதிய வாறுதா
னாகிய வககர மைமபது தததுவ
மாகு முடமபுககு மாறநத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய ஆறு தான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தம் ஆமே.

பதப்பொருள்:

ஆகும் (ஆறு ஆதார சக்கரங்களால் ஆகிய) உடம்பும் (உயிர்களின் உடம்பை) அழிக்கின்ற (அழிக்கின்றதும்) அவ் (அந்த ஆறு சக்கரங்களே ஆகும்) உடல் (உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில்)
போகும் (ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும்) உடம்பும் (உயிர்களின் உடம்புக்குள்) பொருந்திய (பொருந்தி மறைந்து இருக்கின்றதும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்கள்) தான் (தான்)
ஆகிய (அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது) அக்கரம் (ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது) ஐம்பது (ஐம்பது) தத்துவம் (தத்துவங்களாகும்)
ஆகும் (இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய) உடம்புக்கும் (உடம்புக்கும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருப்பது ஓங்காரமே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிக்கின்றதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில் ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்து இருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும் அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

பாடல் #1709

பாடல் #1709: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆறந்த முங்கூடி யாகுமுடம் பினிற்
கூறிய வாதார மாறுங்குறிக் கொண்மி
னாறிய வக்கரமா மைம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறநத முஙகூடி யாகுமுடம பினிற
கூறிய வாதார மாறுஙகுறிக கொணமி
னாறிய வககரமா மைமபதின மெலெ
யூறிய வாதாரத தொரெழுத தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறி கொண்மின்
ஆறிய அக்கரம் ஆம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.

பதப்பொருள்:

ஆறு (ஆறு ஆதார சக்கரங்களின்) அந்தமும் (எல்லைகளும்) கூடி (ஒன்றாக கூடி) ஆகும் (ஆகுகின்ற) உடம்பினில் (உயிர்களின் உடம்பினுள்)
கூறிய (சொல்லிய) ஆதாரம் (ஆதாரங்களாகிய) ஆறும் (ஆறு சக்கரங்களையும்) குறி (குறிக்கோளாக) கொண்மின் (கொண்டு சாதகம் செய்யுங்கள்)
ஆறிய (அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும்) அக்கரம் (வீற்றிருக்கின்ற எழுத்துக்களும்) ஆம் (சக்தியூட்டம் பெற்று) ஐம்பதின் (ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு) மேலே (மேலே வீற்றிருந்து)
ஊறிய (அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து) ஆதாரத்து (நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு) எழுத்து (எழுத்தாகிய) ஆமே (ஓங்காரமாகவே மாறி இருக்கும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களின் எல்லைகளும் ஒன்றாக கூடி ஆகுகின்ற உயிர்களின் உடம்பினுள் சொல்லிய ஆதாரங்களாகிய ஆறு சக்கரங்களையும் குறிக்கோளாக கொண்டு சாதகம் செய்யுங்கள். அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும் வீற்றிருக்கின்ற எழுத்துக்களும் சக்தியூட்டம் பெற்று, ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு மேலே வீற்றிருந்து, அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற ஒரு எழுத்தாகிய ஓங்காரமாகவே மாறி இருக்கும்.

பாடல் #1708

பாடல் #1708: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

மேதாதி யாலே விடாதோமெனத் தூண்டி
யாதார சோதனை யத்துவ சோதனை
தாதார மாகவே தானெழச் சாதித்தா
லாதாரஞ் செய்ப்போக மாவது காயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெதாதி யாலெ விடாதொமெனத தூணடி
யாதார சொதனை யததுவ சொதனை
தாதார மாகவெ தானெழச சாதிததா
லாதாரஞ செயபபொக மாவது காயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேத ஆதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாது ஆரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.

பதப்பொருள்:

மேத (உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை) ஆதியாலே (ஆதியாக இருக்கின்ற இறைவனை) விடாது (இடைவிடாது எண்ணிக் கொண்டு) ஓம் (ஓங்கார) என (மந்திரத்தின் மூலம்) தூண்டி (தூண்டி எழுப்பி)
ஆதார (உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்) அத்துவ (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்)
தாது (உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை) ஆரம் (மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை) ஆகவே (போலவே) தான் (தானாகவே) எழ (எழுச்சி பெறும் படி) சாதித்தால் (சாதகம் செய்து சாதித்தால்)
ஆதாரம் (அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக) செய் (செயல்பட்டு) போகம் (இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும்) ஆவது (அழியாத பாத்திரமாக) காயமே (தமது உடலை மாற்றி விடும்).

விளக்கம்:

உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக் கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி, உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை போலவே தானாகவே எழுச்சி பெறும் படி சாதகம் செய்து சாதித்தால், அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக செயல்பட்டு இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும் அழியாத பாத்திரமாக தமது உடலை மாற்றி விடும்.

இறைவனை அடைவதற்கான ஆறு வழிகள் (அத்துவாக்கள்):

  1. மந்திரம் = மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் இறைவனை அடைவது.
  2. பதம் = இறைவனது திருவடிகளை முழுவதுமாக சரணடைவதன் மூலம் இறைவனை அடைவது.
  3. வர்ணம் = தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை தர்மப் படி செய்து அதன் மூலமே இறைவனை அடைவது.
  4. புவனம் = உலகத்தில் இருக்கின்ற ஆலயங்கள், தீர்த்தங்கள் போன்றவற்றை யாத்திரை செய்வதன் மூலம் இறைவனை அடைவது.
  5. தத்துவம் = இறை தத்துவங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு ஞானத்தினால் இறைவனை அடைவது.
  6. கலை = பாடல் #713 இல் உள்ளபடி பதினாறு கலைகளில் மேன்மை பெற்று அவற்றின் மூலமே இறைவனை அடைவது.

பாடல் #1707

பாடல் #1707: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
வேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லையத்துப் புலன்கரணப் புந்தி
சாதா ரணங்கெட்றான சகமார் கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார சொதனை யானாடி சுததிகள
வெதாதி யீரெண கலநதது விணணொளி
பொதா லையததுப புலனகரணப புநதி
சாதா ரணஙகெடறான சகமார கமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார சோதனை ஆல் நாடி சுத்திகள்
வேத ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி
போத ஆலயத்து புலன் கரண புந்தி
சாதாரணம் கெட்டது ஆன சக மார்கமே.

பதப்பொருள்:

ஆதார (ஆறு ஆதாரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன்) ஆல் (மூலம்) நாடி (உடலில் உள்ள அனைத்து நாடிகளையும்) சுத்திகள் (சுத்தம் செய்த பிறகு)
வேத (வேதங்களுக்கு) ஆதி (மூலமாகிய இறைவன்) ஈர் (இரண்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு கலைகளாக) கலந்தது (தமக்குள் கலந்து) விண் (வானத்தில் இருந்து) ஒளி (உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே)
போத (தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற) ஆலயத்து (ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு) புலன் (ஐந்து புலன்களும்) கரண (நான்கு அந்தக் கரணங்களும்) புந்தி (அறிவும்)
சாதாரணம் (உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை) கெட்டது (மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி) ஆன (செயல்படுவதே) சக (தோழமை) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

ஆறு ஆதாரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நாடிகளையும் சுத்தம் செய்த பிறகு வேதங்களுக்கு மூலமாகிய இறைவன் பதினாறு கலைகளாக தமக்குள் கலந்து வானத்தில் இருந்து உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு ஐந்து புலன்களும், நான்கு அந்தக் கரணங்களும், அறிவும், உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி செயல்படுவதே தோழமை வழி முறையாகும்.

பாடல் #1706

பாடல் #1706: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்று நானென்றுந் தன்மைக ளோராறு
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலெனறு கீழென றிரணடறக காணுஙகால
தானெனறு நானெனறுந தனமைக ளொராறு
பாரெஙகு மாகிப பரநத பராபரங
காரொனறு கறபக மாகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் என்றும் கீழ் என்றும் இரண்டு அற காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பரா பரம்
கார் ஒன்றும் கற்பகம் ஆகி நின்றானே.

பதப்பொருள்:

மேல் (மேன்மையானது) என்றும் (என்றும்) கீழ் (கீழ்மையானது) என்றும் (என்றும்) இரண்டு (இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது) அற (இல்லாமல்) காணுங்கால் (அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது)
தான் (தான்) என்றும் (என்று நினைக்கின்ற ஆத்மாவும்) நான் (நான்) என்றும் (என்று நினைக்கின்ற உடம்பும்) தன்மைகள் (தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற) ஓர் (ஒரு) ஆறும் (ஆறு ஆதார சக்கரங்களும்)
பார் (உலகங்கள்) எங்கும் (அனைத்தும்) ஆகி (ஆகி) பரந்த (அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரம் (பரம்பொருளே என்பதை உணர்ந்தால்)
கார் (வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில்) ஒன்றும் (சேமித்து வைத்து இருக்கும்) கற்பகம் (தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே) ஆகி (உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக) நின்றானே (நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்).

விளக்கம்:

மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்து இருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.