பாடல் #1710

பாடல் #1710: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்
போகு முடம்பும் பொருந்திய வாறுதா
னாகிய வக்கர மைம்பது தத்துவ
மாகு முடம்புக்கு மாறந்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகு முடமபு மழிககினற வவவுடல
பொகு முடமபும பொருநதிய வாறுதா
னாகிய வககர மைமபது தததுவ
மாகு முடமபுககு மாறநத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய ஆறு தான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தம் ஆமே.

பதப்பொருள்:

ஆகும் (ஆறு ஆதார சக்கரங்களால் ஆகிய) உடம்பும் (உயிர்களின் உடம்பை) அழிக்கின்ற (அழிக்கின்றதும்) அவ் (அந்த ஆறு சக்கரங்களே ஆகும்) உடல் (உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில்)
போகும் (ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும்) உடம்பும் (உயிர்களின் உடம்புக்குள்) பொருந்திய (பொருந்தி மறைந்து இருக்கின்றதும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்கள்) தான் (தான்)
ஆகிய (அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது) அக்கரம் (ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது) ஐம்பது (ஐம்பது) தத்துவம் (தத்துவங்களாகும்)
ஆகும் (இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய) உடம்புக்கும் (உடம்புக்கும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருப்பது ஓங்காரமே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிக்கின்றதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில் ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்து இருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும் அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.