பாடல் #1493: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)
பிணங்கி நிற்கின்றவை யெந்தையும் பின்னை
யணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருது மொருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பிணஙகி நிறகினறவை யெநதையும பினனை
யணஙகி யெறிவ னயிரமன வாளாற
கணமபதி னெடடுங கருது மொருவன
வணஙகவல லானசிநதை வநதுநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பிணங்கி நிற்கின்றவை எந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.
பதப்பொருள்:
பிணங்கி (ஒன்றோடு ஒன்று பிணைந்து) நிற்கின்றவை (தோழமையுடன் நிற்கின்றவையாகிய) எந்தையும் (எமது தந்தையாகிய இறைவனும்) பின்னை (அதனை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற உயிரும்)
அணங்கி (அந்த உயிரை வருத்தக் கூடிய கர்மங்களையும்) எறிவன் (அறுத்து எறிகின்றான் இறைவன்) அயிர் (நுண்ணியமான) மன (மனம் என்கின்ற) வாளால் (கூர்மையான வாளைக் கொண்டு அவனருளால்)
கணம் (தேவ கணங்களாகிய) பதினெட்டும் (பதினெட்டு வகையான கணங்களாலும்) கருதும் (எப்போதும் எண்ணப் படுகின்ற) ஒருவன் (ஒருவனாகிய இறைவனை)
வணங்க (தமக்குள்ளேயே அறிந்து வணங்கும்) வல்லான் (வல்லமை பெற்ற சாதகரின்) சிந்தை (சிந்தைக்குள்) வந்து (அந்த இறைவன் தோழமையுடன் வந்து) நின்றானே (நின்று அருளுகின்றான்).
விளக்கம்:
தமது ஆன்மாவோடு ஒன்றாக பிணைந்து தோழமையுடன் நிற்கின்ற எமது தந்தையாகிய இறைவனை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற உயிரும் அந்த உயிரை வருத்தக் கூடிய கர்மங்களையும் உயிரின் நுண்ணியமான மனம் என்கின்ற கூர்மையான வாளைக் கொண்டு தமது அருளால் அறுத்து எறிகின்றான் இறைவன். பதினெட்டு வகையான தேவ கணங்களாலும் எப்போதும் எண்ணப் படுகின்ற ஒருவனாகிய இறைவனை தமக்குள்ளேயே அறிந்து வணங்கும் வல்லமை பெற்ற சாதகரின் சிந்தைக்குள் அந்த இறைவன் தோழமையுடன் வந்து நின்று அருளுகின்றான்.
18 விதமான தேவ கணங்கள்:
- சுரர் – உலக இயக்கத்திற்கு உதவும் தேவ லோகத்து தேவர்கள்.
- சித்தர் – இறை நிலையில் இருப்பவர்கள்.
- அசுரர் – அசுரர்கள்.
- தைத்தியர் – அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்கள்.
- கருடர் – கருடர்கள்.
- கின்னரர் – நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
- நிருதர் – அரக்கர்கள்.
- கிம்புருடர் – யாளி என்று அழைக்கப்படும் சிங்க முகமும் மனித உருவமும் கொண்ட கணங்கள்.
- காந்தர்வர் – கந்தவர்கள் (தேவர்களுக்கு அடுத்த நிலை).
- இயக்கர் – யட்சர்கள்.
- விஞ்சையர் – கலைகளில் பெரும் ஞானம் உடையவர்கள்.
- பூதர் – சிவனுக்கு சேவர்களாக இருக்கும் பூத கணங்கள்.
- பிசாசர் – கொடூரமான கோபக் குணத்துடன் வடிவமற்றவர்கள்.
- அந்தரர் – சுவர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்கள்.
- யோகர் – ரிஷிகளும் முனிவர்களும்.
- உரகர் – நாகர்கள்.
- ஆகாய வாசர் – விண்ணுலக வாசிகள்.
- விண்மீன் நிறைகணம் – நட்சத்திர மண்டலங்களில் நிறைந்திருக்கும் கணங்கள்.
