பாடல் #1494

பாடல் #1494: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மை யினாகு
முளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வளஙகனி யொககும வளநிறத தாரககும
வளஙகனி யொபபதொர வாயமை யினாகு
முளஙகனிந துளள முகநதிருப பாரககுப
பழஙகனிந துளளெ பகுநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையின் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.

பதப்பொருள்:

வளம் (செழுமையாக பழுத்த) கனி (பழத்தை) ஒக்கும் (போலவே) வள (செழுமையாக) நிறத்தார்க்கும் (பிரகாசிக்கின்ற தேஜஸான உடலை பெற்று இருக்கின்ற அடியவர்களுக்கு)
வளம் (அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய) கனி (பழுத்த பழத்தைப்) ஒப்பது (போல இருப்பதற்கு காரணம்) ஓர் (அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த ஒரு) வாய்மையின் (வாய்மை எனும் தர்மத்தினால்) ஆகும் (ஆகும்)
உளம் (அந்த அடியவர்களது உள்ளமானது) கனிந்து (இறைவன் மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்து இருப்பதனாலும்) உள்ளம் (உள்ளத்தில்) உகந்து (அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும் எப்போதும் இன்பத்தோடு) இருப்பார்க்கு (இருக்கின்றவர்களுக்கு)
பழம் (நன்றாக பழுத்த பழத்திற்குள்) கனிந்து (கனிந்து இருக்கும் சுவை போலவே) உள்ளே (அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள்) பகுந்து (சுவை போல சேர்ந்து தோழமையுடன்) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

செழுமையாக பழுத்த பழத்தை போலவே செழுமையாக பிரகாசிக்கின்ற தேஜஸான உடலை பெற்று இருக்கின்ற அடியவர்களுக்கு அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய பழுத்த பழத்தைப் போல இருப்பதற்கு காரணம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த ஒரு வாய்மை எனும் தர்மத்தினால் ஆகும். அந்த அடியவர்களது உள்ளமானது இறைவன் மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்து இருப்பதனாலும் அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும் எப்போதும் இன்பத்தோடு இருக்கின்றார்கள். நன்றாக பழுத்த பழத்திற்குள் கனிந்து இருக்கும் சுவை போலவே அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள் சுவை போல சேர்ந்து தோழமையுடன் நிற்கின்றான் இறைவன்.

கருத்து:

எந்த மார்க்கத்தையும் கடை பிடிக்காவிட்டாலும் சத்தியத்தையும் தர்மத்தையும் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் கடை பிடித்து வந்தால் அவர்களுக்குள் தோழமையுடன் இறைவன் எப்போதும் சேர்ந்து இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.