பாடல் #1491

பாடல் #1491: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

யோகமும் போகமும் யோகியர் காகுமாம்
யோக சிவரூப முற்றிடு முள்ளத்தோர்
யோகம் புவியிற் புருடாதி சித்தியா
மாக மிரண்டு மழியாத யோகிக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகமும பொகமும யொகியர காகுமாம
யொக சிவரூப முறறிடு முளளததொர
யொகம புவியிற புருடாதி சிததியா
மாக மிரணடு மழியாத யொகிககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகமும் போகமும் யோகியர்கு ஆகும் ஆம்
யோக சிவ ரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
யோகம் புவியில் புருட ஆதி சித்தி ஆம்
ஆகம் இரண்டும் அழியாத யோகிக்கே.

பதப்பொருள்:

யோகமும் (யோகமும்) போகமும் (அதனால் கிடைக்கின்ற பேரின்பமும்) யோகியர்கு (யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே) ஆகும் (அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு) ஆம் (கிடைக்கும்)
யோக (யோகத்தில்) சிவ (இறைவனின்) ரூபம் (ஒளி உருவத்தை) உற்றிடும் (தமக்குள்ளே தரிசிக்கின்ற) உள்ளத்து (யோகியர்களின் உள்ளத்திற்குள்) ஓர் (என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு)
யோகம் (யோகமே) புவியில் (இந்த உலகத்தில் இருக்கின்ற) புருட (யோகியர்களின் ஆன்மாவிற்கு) ஆதி (ஆதியாகிய பரமாத்மாவின்) சித்தி (அருள் சக்தியாக) ஆம் (கிடைக்கும்)
ஆகம் (அந்த அருள் சக்தியால் உடல் மனம்) இரண்டும் (ஆகிய இரண்டும்) அழியாத (என்றும் அழியாமல்) யோகிக்கே (இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்).

விளக்கம்:

யோகமும் அதனால் கிடைக்கின்ற பேரின்பமும் யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கிடைக்கும். யோகத்தில் இறைவனின் ஒளி உருவத்தை தமக்குள்ளே தரிசிக்கின்ற யோகியர்களின் உள்ளத்திற்குள் என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு யோகமே இந்த உலகத்தில் இருக்கின்ற யோகியர்களின் ஆன்மாவிற்கு ஆதியாகிய பரமாத்மாவின் அருள் சக்தியாக கிடைக்கும். அந்த அருள் சக்தியால் உடல் மனம் ஆகிய இரண்டும் என்றும் அழியாமல் இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்.

2 thoughts on “பாடல் #1491

  1. Kothandaraman Reply

    தங்களின் பணி சிறக்க இறைவன் தங்களுக்கு எல்லா வல்லமைகளும் கொடுத்து ஆசீர்வதிக்க இறைவனை பிராரத்திக்கிறேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.