பாடல் #1490

பாடல் #1490: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

யோகமு மாதியி னுள்ளே யகலிடம்
யோக சமாதியி னுள்ளே யுளரொளி
யோக சமாதியி னுள்ளே யுளசத்தி
யோக சமாதி யுகந்தவர் சித்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகமு மாதியி னுளளெ யகலிடம
யொக சமாதியி னுளளெ யுளரொளி
யொக சமாதியி னுளளெ யுளசததி
யொக சமாதி யுகநதவர சிததரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகமும் ஆதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே.

பதப்பொருள்:

யோகமும் (யோகம் என்று அறியப் படுகின்ற சாதனையானது) ஆதியின் (ஆதியாக இருக்கின்ற இறைவனின்) உள்ளே (உள்ளேயே அடங்கி) அகல் (அண்ட சராசரங்கள்) இடம் (அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்று இருக்கின்றது)
யோக (அந்த யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உள்ளே (சாதகருக்கு உள்ளே) உளர் (என்றும் நிலைபெற்று இருக்கின்ற) ஒளி (ஒளியாக இறைவன் இருக்கின்றான்)
யோக (யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உள்ளே (சாதகருக்கு உள்ளே) உள (இருக்கின்ற) சத்தி (இறைவனின் சக்தியை)
யோக (யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உகந்தவர் (இருந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு பேரின்பத்திலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களே) சித்தரே (சித்தர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

யோகம் என்று அறியப் படுகின்ற சாதனையானது ஆதியாக இருக்கின்ற இறைவனின் உள்ளேயே அடங்கி அண்ட சராசரங்கள் அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்று இருக்கின்றது. அந்த யோகத்தில் ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில் சாதகருக்கு உள்ளே என்றும் நிலைபெற்று இருக்கின்ற ஒளியாக இறைவன் இருக்கின்றான். அந்த ஒளியாகிய இறைவனின் சக்தியை சமாதி நிலையில் இருந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு பேரின்பத்திலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களே சித்தர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.