பாடல் #1492

பாடல் #1492: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்சக மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார சொதனை யானாடி சுததிகள்
மெதாதி யீரெண கலநதது விணணொளி
போதா லயததுப புலனகர ணமபுநதி
சாதா ரணஙகெட லாஞசக மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதை ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி
போத ஆலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடல் ஆம் சக மார்கமே.

பதப்பொருள்:

ஆதார (சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும்) சோதனையால் (ஆராய்ச்சி செய்து அதன் வழியாக) நாடி (உடலுக்குள் இருக்கின்ற நாடிகளை) சுத்திகள் (சுத்தம் செய்து)
மேதை (உடல் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற மேதைக் கலை) ஆதி (முதலாகிய) ஈர் (இரண்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு கலைகளோடு) கலந்தது (கலந்தது) விண் (விண்ணில் இருக்கின்ற) ஒளி (ஒளி வடிவமான இறை சக்தியானது)
போத (அறிவின்) ஆலயத்து (ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற) புலன் (ஐந்து புலன்களும்) கரணம் (நான்கு கரணங்களும்) புந்தி (புத்தியும்)
சாதாரணம் (தங்களின் இயல்பான செயல்களை) கெடல் (இழந்து இறை நிலையை) ஆம் (பெறுவதே) சக (இறைவனோடு தோழமையாக இருக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் ஆராய்ச்சி செய்து அதன் வழியாக உடலுக்குள் இருக்கின்ற நாடிகளை சுத்தம் செய்து உடல் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற மேதைக் கலை முதலாகிய பதினாறு கலைகளோடு விண்ணில் இருக்கின்ற ஒளி வடிவமான இறை சக்தியானது கலந்தது. அதன் பிறகு அறிவின் ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற ஐந்து புலன்களும் நான்கு கரணங்களும் புத்தியும் தங்களின் இயல்பான செயல்களை இழந்து இறை நிலையை பெறுவதே இறைவனோடு தோழமையாக இருக்கின்ற வழி முறையாகும்.

உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற பதினாறு கலைகள்:

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

ஐந்து புலன்கள்:

  1. கண் – பார்த்தல்
  2. காது – கேட்டல்
  3. மூக்கு – நுகர்தல்
  4. வாய் – பேசுதல்
  5. தோல் – தொடுதல்

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.