பாடல் #1466

பாடல் #1466: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

யோகச் சமையமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே யட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே யுற்ற பரோதையம்
யோக பிடேகமே யொண்சத்தி யுற்றலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகச சமையமெ யொகம பலவுனனல
யொக விசெடமெ யடடாஙக யொகமாம
யொக நிரவாணமெ யுறற பரொதையம
யொக பிடெகமெ யொணசததி யுறறலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோக சமையமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரா உதயம்
யோக அபிடேகமே ஒண் சத்தி உற்றலே.

பதப்பொருள்:

யோக (யோகத்தில்) சமையமே (சமயம் எனப்படுகின்ற சரியை என்பது) யோகம் (யோகத்தில் உள்ள) பல (பல விதமான நெறிமுறைகளை) உன்னல் (உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும்)
யோக (யோகத்தில்) விசேடமே (விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது) அட்ட (எட்டு) அங்க (அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற) யோகம் (அட்டாங்க யோகம்) ஆம் (ஆகும்)
யோக (யோகத்தில்) நிர்வாணமே (நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது) உற்ற (தமக்கு கிடைக்கப் பெற்ற) பரா (அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற) உதயம் (நிலை தோன்றுவது ஆகும்)
யோக (யோகத்தில்) அபிடேகமே (அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது) ஒண் (தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற) சத்தி (இறை சக்தியை) உற்றலே (உணர்வது ஆகும்).

விளக்கம்:

யோகத்தில் சமயம் எனப்படுகின்ற சரியை என்பது யோகத்தில் உள்ள பல விதமான நெறிமுறைகளை உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும். யோகத்தில் விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற அட்டாங்க யோகம் ஆகும். யோகத்தில் நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது தமக்கு கிடைக்கப் பெற்ற அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற நிலை தோன்றுவது ஆகும். யோகத்தில் அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற இறை சக்தியை உணர்வது ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.