பாடல் #1464

பாடல் #1464: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவ
ரெத்தனை யாயிரம் வீழ்ந்ததென் றெண்ணிலீர்
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையா
யத்த னிவனென்றே யன்புறு வார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒததசெங கொலா ருலபபிலி மாதவ
ரெததனை யாயிரம வீழநததென றெணணிலீர
சிததரகள தெவரகள மூவர பெருமையா
யதத னிவனெனறெ யனபுறு வாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தது என்று எண் இலீர்
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே.

பதப்பொருள்:

ஒத்த (ஒன்றாக இருக்கும்) செங் (செம்மையான) கோலார் (கோலைப் போல வீற்றிருந்து) உலப்பு (அழிவு) இலி (இல்லாத) மாதவர் (மாபெரும் தவத்தை புரிந்தவர்களில்)
எத்தனை (எத்தனையோ) ஆயிரம் (ஆயிரம் பேர்கள் அதை தொடராமல் விட்டு விட்டதால்) வீழ்ந்தது (வீழ்ந்து போனவர்கள்) என்று (என்று) எண் (எண்ணிக்கை) இலீர் (இல்லாமல் இருக்கின்றார்கள்)
சித்தர்கள் (அப்படி விட்டு விடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை புரிகின்றவர்களை சித்தர்களும்) தேவர்கள் (தேவர்களும்) மூவர் (மும்மூர்த்திகளும்) பெருமையாய் (பெருமையுடன்)
அத்தன் (எங்களின் அப்பனான இறைவன்) இவன் (இவனே) என்றே (என்று கூறி) அன்பு (அவரோடு அன்பு) உறுவார்களே (கொண்டு இருப்பார்கள்).

விளக்கம்:

ஒன்றாக இருக்கும் செம்மையான கோலைப் போல வீற்றிருந்து அழிவு இல்லாத மாபெரும் தவத்தை புரிந்தவர்களில் எத்தனையோ ஆயிரம் பேர்கள் அதை தொடராமல் விட்டு விட்டதால் வீழ்ந்து போனவர்கள் என்று எண்ணிக்கை இல்லாமல் இருக்கின்றார்கள். அப்படி விட்டு விடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை புரிகின்றவர்களை சித்தர்களும் தேவர்களும் மும்மூர்த்திகளும் பெருமையுடன் எங்களின் அப்பனான இறைவன் இவனே என்று கூறி அவரோடு அன்பு கொண்டு இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.