பாடல் #1459

பாடல் #1459: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுத்தறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூவினிற கெநதம பொருநதிய வாறுபொற
சீவனுக குளளெ சிவமணம பூததது
வொவியம பொல வுணரநதறி வாளரககு
நாவி யணைநத நடுததறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூவினில் கந்தம் பொருந்திய ஆறு போல்
சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடு தறி ஆமே.

பதப்பொருள்:

பூவினில் (மலராத பூவிற்குள்ளும்) கந்தம் (நறுமணம்) பொருந்திய (கலந்து இருக்கின்ற) ஆறு (முறையை) போல் (போலவே)
சீவனுக்கு (ஜீவாத்மாவிற்கு) உள்ளே (உள்ளே) சிவ (சிவம் எனும் பரம் பொருளானது) மணம் (பூவுக்குள் இருக்கின்ற நறுமணம் போல கலந்து இருக்கின்றது) பூத்தது (பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே)
ஓவியம் (வரைந்து வைத்த ஓவியம்) போல (போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து) உணர்ந்து (இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து) அறிவாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
நாவி (கஸ்தூரியோடு) அணைந்த (சேர்ந்து இருக்கும் நறுமணம் போல) நடு (தரையில் நடப்பட்ட) தறி (கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின்) ஆமே (பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்).

விளக்கம்:

மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்து இருக்கின்ற முறையை போலவே ஜீவாத்மாவிற்கு உள்ளே சிவம் எனும் பரம் பொருளானது கலந்து இருக்கின்றது. பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு, கஸ்தூரியோடு சேர்ந்து இருக்கும் நறுமணம் போல தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.