பாடல் #1100: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள்
ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
விளக்கம்:
பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமான மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். அழகிய கூந்தலுடன் வளைந்த புருவங்களைக் கொண்டு நீல நிறத்தில் இருக்கும் குவளை மலர் மலர்ந்தது போன்ற கண்களோடு இனிமையான அமிழ்தத்தோடு சேர்ந்து பேரானந்தமாக இருக்கின்ற பேரழகு பொருந்திய வயிரவியே பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமாக இருந்து அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகின்றாள்.
