பாடல் #1081

பாடல் #1081: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

விளக்கம்:

பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவாக வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள் சூலி என்கிற பெயருடன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம், நாக பாசாணம், அங்குசம் ஆகியவைகளை ஏந்திக்கொண்ட உருவமாக அருளுகின்றாள். இவள் திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணாத பெரும் உருவமாக அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்றாள்.

கருத்து: வயிரவி என்பவள் சூலி என்கிற பெயருடன் இருப்பதை இப்பாடலில் உருவகிக்கலாம். அவளுடைய கைகளில் உள்ள சூலம் அடியவர்களை காப்பதையும், கபாலம் அடியவர்களின் பிறவிகளாகத் தொடரும் வினைகளை அறுப்பதையும், நாக பாசாணம் பிறவியோடு வரும் பந்தபாசங்களை அறுப்பதையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.