பாடல் #364

பாடல் #364: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.

விளக்கம்

உலகம் முழுவதும் நிறைந்து இருந்த குளிர்ந்த பிரளய கடல் நீர் வடிந்தது. வானகத்தவர்களும் தேவர்களும் கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் சிவத்தைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். கடல்நீரை விண்ணகம் வரை பரவச் செய்த இறைவனும் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்து பேரொளியாய் எழுந்தருளினன். இத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தி பின்பு அனைவருக்கும் அருள் செய்த இறைவன் திருவுள்ளத்தை யாரும் அறியவில்லை.

Related image

பாடல் #365

பாடல் #365: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

விளக்கம்:

பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவர் திகைத்துப் போனார்கள். அங்கு பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தியை அனைத்தையும் படைத்து சுயம்புவாய் தோன்றியவனே என்று இறைவனை மனதில் வைத்து வழிபட்ட உலகத்தில் உள்ள உயிர்களுக்காக கடல்நீர் வெள்ளம் கடலோசை மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த நீரில் அக்னியை உண்டாக்கினார் இறைவன்.

உட்கருத்து: பிரளயத்தை ஏற்படுத்தி அனைத்தையும் அழித்த இறைவன் தன்னை வழிபட்டு சரணடைந்த உயிர்களை காப்பாற்றினார்.

Related image

பாடல் #366

பாடல் #366: இரண்டாம் தந்திரம் – 5. பிரளயம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்தியைக்கொண் டானே.

விளக்கம்:

இறைவனை ஏற்காமல் அவரை குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களை பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்ற தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அந்த உயிர்களின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை அழித்து அவர்களையும் ஆட்கொண்டு விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கினான்.

உட்கருத்து: பிரளய காலத்தில் தம் மீது அன்புகொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்று இல்லாமல் தம்மை பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெரும் கருணை கொண்டவன் இறைவன். பிரளய காலத்தில் தம் மீது அன்பு கொள்ளாத பிற உயிர்களின் தலையில் இருக்கும் அகங்காரம் ஆணவத்தை அழித்து அந்த உயிர்களையும் ஆட்கொண்டு அருளும் இறைவன் பிறகு புதியதாக உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கி அருளுகின்றான்.

Image result for சதாசிவ மூர்த்தி

பாடல் #353

பாடல் #353: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிதைந்தனர் அண்ணல் சினஞ்செய்த போதே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் இறைவனுக்குத் தரும் அவிர்பாகத்தையும் அவருக்குத் தராமலும் அவரை மதிக்காமலும் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் ஒன்றை செய்தான் தக்கன். அவனது அறியாமையைக் கண்டு கோபமுற்ற ஈசன் அந்த யாகத்தையும் அவனது செறுக்கையும் அழித்து அவனக்கு நல் அறிவைக் கொடுக்க மறக்கருணை கொண்டு வீரபத்திரர் எனும் பைரவ அவதாரத்தை அந்த மாபெரும் யாகத்தின் தீயிலிருந்து வெளிப்பட்டார். அந்த மாபெரும் யாகத்தை செய்தவர்கள் மற்றும் அதை ஏற்க வந்த தேவர்களும் இறைவனின் கோப முக தரிசனத்தைப் பார்த்த மறுகணமே அவனது அருளன்றி இந்த யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாதென்பதை அறிந்து இறைவனின் கோபத்தைக் கண்டு மிகவும் அஞ்சி தமது நிலை தடுமாறி எல்லாத் திசையிலும் சிதைந்து போனார்கள்.

உட்கருத்து: தாம் செய்யும் எந்த செயலானாலும் மனம் வாக்கு உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி இறையருளுடன் செய்வது வேள்வியாகும். மனம், வாக்கு, உடம்பு மூன்றை மட்டுமே வைத்து இறையருள் இல்லாமல் செய்வது தக்கன் வேள்வியாகும்.

Related image

பாடல் #354

பாடல் #354: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லாதானும் அருள்புரிந் தானே.

விளக்கம்:

தக்கன் யாகத்தையும் அதைச் செய்ய முற்பட்டவர்களையும் அதை ஏற்றுக்கொண்ட தேவர்களையும் இறைவனின் பைரவ அவதாரமான வீரபத்திரர் அளித்த தண்டனையை கண்டு யாகத்தீயில் இருந்து எழுந்து வந்த திருமால் இறைவனே தவறு செய்தவன் இவனல்ல உலகினில் பிறந்த சதியின் மேல் வைத்த பாசத்தாலும் கொண்ட பந்தத்தாலும் அறிவிழந்து இவன் செய்த யாகத்தின் அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்ட நாங்களே பெரும் தவறு செய்தவர்கள் எம்மை மன்னித்து அருளுங்கள் என்று கூறி இறைவனின் திருவடிகளில் விழுந்து தொழ என்றுமே இறப்பில்லாத இறைவனும் அவர்களுக்கு அருள் புரிந்தான்.

உட்கருத்து: மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி பந்த பாசத்தினால் செயல்களை செய்தால் அந்த செயல் இறையருள் இல்லாமல் பூர்த்தியாகாமல் இருக்கும் அதை உணர்ந்து உயிர்கள் பந்த பாசத்தில் இருந்து விடுபட்டு இறையருளுடன் செய்யும் போது இறைவன் அந்த உயிருக்கு அருள் செய்வான்.

Related image

பாடல் #355

பாடல் #355: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகில்
அப்பரி சேஅது நீர்மை யுள்கலந்து
அப்பரி சேசிவனாய் ஆவிக்கின் றானே.

விளக்கம்:

இறைவனை அழிக்க தக்கன் செய்த மாபெரும் யாகத்தில் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு அவிர்பாகங்களை ஏற்க வந்த பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவருக்கும் அவரவர் தொழில்களைப் பரிசாக அளித்து அந்தத் தொழில்களைச் செய்யும் சக்தியாகவும் இருக்கும் இறைவனை அழிக்க யாகத்தில் மாபெரும் அக்னி வந்தது அதிசயமாக தெரிந்தாலும். தீயாகவும் தீயை வளர்க்க யாகத்தில் இடும் பொருட்களாகவும் அந்த பொருளின் தன்மையாகவும் அதனை ஏற்று ஆவியாக்குபவனும் இறைவனே.

உட்கருத்து: உயிர்கள் நல்செயல்கள் செய்தால் நல்வினைகள் கிடைத்து சிவனின் அருளும், தீய செயல்கள் செய்தால் தீவினைகள் சேர்ந்து அதற்கான தண்டனைகளும் உயிருக்கு கிடைக்கும் இவை அனைத்திலும் சிவன் அணுவாய் கலந்திருப்பான். அனைத்தும் இறைவனே ஆவதால் நல்லவையானாலும் தீயவையானாலும் அவனின்றி எந்தச் செயலும் நிகழாது.

Related image

பாடல் #356

பாடல் #356: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சேஅங்கி யுள்நாளும் உள்ளிட்டு
அப்பரி சேஆகி அலர்ந்திருந் தானே.

விளக்கம்:

தக்கன் செய்த யாகத்தில் அவிர்பாகத்தைப் பரிசாகப் பெற்ற பிரம்மன் திருமால் மற்றும் அனைத்து தேவர்களும் இறைவனே தாமாக இருக்கும் காரணத்தை அறிந்து தமது அறியாமையால் பிழை செய்துவிட்டோமே என்று வருந்தி அவனது திருவருளை வேண்டி நின்றனர். அக்கினிதேவனும் தமக்குள் தீயாகவும் ஒளியாகவும் வெப்பமாகவும் என்னாளும் இருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனது திருவருளை வேண்டி நின்றான். அவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவனும் அனைவரின் பிழைகளை மன்னித்து ஒளிமயமாகி எங்கும் வியாபித்து இருந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளிலும் அணுவாய் கலந்திருக்கும் இறைவன் உயிர்கள் தன் தவறை உணரும் போது அவர்களை மன்னித்து அருள்செய்வான்.

Related image

பாடல் #357

பாடல் #357: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.

விளக்கம்:

பாடல் #356 ல் உள்ளபடி அனைவரின் பிழைகளை மன்னித்து எங்கும் ஒளிமயமாகி வியாபித்து இருக்கும் சிவபெருமானை வானவர்கள் வணங்க அழுக்குகளையெல்லாம் எரித்து எதையும் தூய்மையாக்கும் அக்கினி தக்கன் யாகத்தில் கலந்து கொண்டு தூய்மை கெட்டதால் தன் குற்றம் நீங்க சிவனின் திருவடிகளை பற்றிக்கொள்ள சிவனும் அன்போடு அக்னிக்கு அருள் செய்ய ஓடிவந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு அந்த தவறில் அணுவாய் கலந்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினைத்து உள்ளத்தில் பற்றிக்கொள்ள இறைவன் அன்போடு அவர்களுக்கு அருள் செய்ய ஒடிவருவான்.

Related image

பாடல் #358

பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

விளக்கம்:

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.

உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.

Related image

பாடல் #359

பாடல் #359: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

விளக்கம்:

இறைவனுக்காக மந்திரங்களை செபித்து இறையருள் பெற்ற தேவர்கள் தக்கனின் யாகத்தில் இறையருள் இல்லாத மந்திரங்களை சொல்லி தங்களுக்குப் பெரும் பொருள் கிடைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்து செய்து குவித்த மந்திரங்கள் இறைவனது அருள் பெறாமல் செய்யப்பட்டமையால் அவர்களையே கொல்லும் கொடிய மந்திரங்களாக மாறிவிட்டன.

உட்கருத்து: உயிர்கள் வேள்வி போல் செய்யும் செயல்கள் யாவும் இறையருளுடன் செய்தால் அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் உலக ஆசைக்காக இறையருள் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு தீமைகளையே செய்யும்.