பாடல் #1399

பாடல் #1399: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

எண்ணமர் சத்திகள் நாற்பத்தி னாலுட
னெண்ணமர் சத்திகள் நாற்பத்தி னால்வரா
மெண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவ
ளெண்ணிய வெண்ணங் கடந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எணணமர சகதிகள நாறபததி னாலுட
னெணணமர சததிகள நாறபததி னாலவரா
மெணணிய பூவித ளுளளெ யிருநதவ
ளெணணிய வெணணங கடநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எண் அமர் சத்திகள் நால் பத்து நால் உடன்
எண் அமர் சத்திகள் நால் பத்து நால்வர் ஆம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.

பதப்பொருள்:

எண் (சாதகரின் எண்ணத்தில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் சேர்த்து மொத்தம் நாற்பத்து நான்கு சக்திகளாக இருக்கின்றன) உடன் (அவற்றோடு)
எண் (சாதகரின் எண்ணத்தில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும்) நால்வர் (நான்கும் சேர்த்து மொத்தம் நாற்பத்து நான்கு) ஆம் (பேர்களாகவே இருக்கின்றனர்)
எண்ணிய (சாதகரும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற) பூ (கழுத்திலிருந்து அடிவயிறு வரை உள்ள விசுக்தி [பதினாறு இதழ்கள்], அநாகதம் [பன்னிரண்டு இதழ்கள்], மணிப்பூரகம் [பத்து இதழ்கள்], சுவாதிட்டானம் [ஆறு இதழ்கள்] ஆகிய நான்கு சக்கரங்களில் இருக்கின்ற) இதழ் (மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு) உள்ளே (உள்ளே) இருந்தவள் (இருக்கின்ற சக்திகளாக இறைவியே இருக்கின்றாள்)
எண்ணிய (சாதகரும் அந்த சக்திகள் அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற) எண்ணம் (தியானத்தின் எண்ணங்களையும்) கடந்து (தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக) நின்றாளே (இறைவி நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1398 இல் உள்ளபடி தன்னைச் சுற்றி பாதுகாப்பாக இருக்கின்ற இறைவியையே எண்ணி தியானத்தில் இருக்கின்ற சாதகரின் எண்ணத்தில் அமர்ந்து இருக்கின்ற சக்திகள் மொத்தம் நாற்பத்து நான்கு பேர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நாற்பத்து நான்கு பேரும் சாதகரின் கழுத்திலிருந்து அடிவயிறு வரை உள்ள விசுக்தி [பதினாறு இதழ்கள்], அநாகதம் [பன்னிரண்டு இதழ்கள்], மணிப்பூரகம் [பத்து இதழ்கள்], சுவாதிட்டானம் [ஆறு இதழ்கள்] ஆகிய நான்கு சக்கரங்களில் இருக்கின்ற மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு உள்ளே இருக்கின்றார்கள். இந்த நாற்பத்து நான்கு பேர்களின் சக்திகளாகவும் இறைவியே இருக்கின்றாள். சாதகரும் இந்த நாற்பத்து நான்கு சக்திகளும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற தியானத்தின் எண்ணங்கள் அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக இறைவி நிற்கின்றாள்.

பாடல் #1400

பாடல் #1400: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளங் கச்சாகப்
படர்ந்தல் குற்பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை குமிறீயில் வந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கடநதவள பொனமுடி மாணிககத தொடு
தொடரநதணி முததுப பவளங கசசாகப
படரநதல குறபடடாடை பாதச சிலமபு
மடநதை குமிறீயில வநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கடந்து அவள் பொன் முடி மாணிக்க தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு
மடந்தைக்கும் இறீம் இல் வந்து நின்றாளே.

பதப்பொருள்:

கடந்து (அனைத்தையும் தாண்டி இருக்கின்ற) அவள் (மாபெரும் சக்தியான இறைவி) பொன் (தங்கத்தாலான) முடி (கிரீடத்தை தனது திருமுடியிலும்) மாணிக்க (மாணிக்கத்தாலான) தோடு (தோடுகளை தனது திருக்காதுகளிலும்)
தொடர்ந்து (அதைத் தொடர்ந்து) அணி (அணிந்து இருக்கின்ற) முத்து (முத்துக்களாலான ஆரத்தை தனது திருக்கழுத்திலும்) பவளம் (பவளங்களால் பதிக்கப் பட்ட) கச்சு (கச்சையை) ஆக (தனது திருமார்பிலும் அணிந்து கொண்டு)
படர்ந்த (தனது திருஇடையைத் தாண்டி படர்ந்து இருக்கின்ற) அல்குல் (கீழ் பகுதியில்) பட்டு (பட்டாலான) ஆடை (ஆடையையும்) பாத (தனது திருவடிகளில்) சிலம்பு (சிலம்புகளையும் அணிந்து கொண்டு)
மடந்தைக்கும் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற) இறீம் (‘ஹ்ரீம்’ எனும் பீஜ) இல் (மந்திரத்தில்) வந்து (வந்து) நின்றாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1399 இல் உள்ளபடி அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியான இறைவி தங்கத்தாலான கிரீடத்தை தனது திருமுடியிலும் மாணிக்கத்தாலான தோடுகளை தனது திருக்காதுகளிலும் முத்துக்களாலான ஆரத்தை தனது திருக்கழுத்திலும் பவளங்களால் பதிக்கப் பட்ட கச்சையை தனது திருமார்பிலும் தனது திருஇடையைத் தாண்டி படர்ந்து இருக்கின்ற கீழ் பகுதியில் பட்டாலான ஆடையையும் தனது திருவடிகளில் சிலம்புகளையும் அணிந்து கொண்டு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற ‘ஹ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தில் வந்து வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1401

பாடல் #1401: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றவள் சத்தி நிறந்தரம் மாகவே
கண்டிடு மேரு வணுவாதி தானாதிப்
பண்டைய வாநின் பகட்டை யறுத்திட
வொன்றிய தீபமுணர்ந் தாற்குண் டாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறவள சததி நிறநதரம மாகவே
கணடிடு மெரு வணுவாதி தானாதிப
பணடைய வாநின பகடடை யறுததிட
வொனறிய தீபமுணரந தாறகுண டாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற அவள் சத்தி நிறந்த தரம் ஆகவே
கண்டு இடும் மேரு அணு ஆதி தான் ஆதி
பண்டைய ஆ நின்ற பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாகுமே.

பதப்பொருள்:

நின்ற (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற) அவள் (இறைவியானவள்) சத்தி (பராசக்தியாக) நிறந்த (சாதகருக்குள் முழுவதும் நிறைந்து) தரம் (மிகவும் உயர்ந்த நிலை) ஆகவே (ஆகவே தமக்குள் செயல் படுவதை)
கண்டு (சாதகர் தரிசித்து) இடும் (தமக்குள் அவளை வைத்து வணங்கும் போது) மேரு (சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு செயல்படுகின்ற இறைவியே) அணு (அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும்) ஆதி (ஆதியாகவும்) தான் (அவருக்கு வெளியில் அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் தானே) ஆதி (ஆதியாகவும் இருக்கின்றாள்)
பண்டைய (அசையா சக்தியாகிய பரம்பொருளில் இருந்து முதன் முதலில் ஆசையினால் பிரிந்து வந்த) ஆ (ஆன்மாவுக்கு) நின்ற (உள்ளே இறைவனை விட்டு பிரிவதற்கு காரணமாக நின்ற) பகட்டை (அந்த ஆசையை) அறுத்திட (அவளே முழுவதுமாக அறுத்து அருளுகின்றாள்)
ஒன்றிய (பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) தீபம் (ஜோதி வடிவமாகிய சாதகரின் ஆன்மாவை) உணர்ந்தார்க்கு (தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களுக்கு) உண்டாகுமே (இறைவி ஆதியில் இருந்து தொடர்ந்து வருகின்ற ஆசையை அறுத்து மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்குகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1400 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற இறைவியானவள் பராசக்தியாக சாதகருக்குள் முழுவதும் நிறைந்து மிகவும் உயர்ந்த நிலையில் தமக்குள் செயல் படுவதை சாதகர் தரிசித்து தமக்குள் அவளை வைத்து வணங்கும் போது சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு அவள் செயல்படுகின்றாள். இப்படி சாதகருக்குள் செயல்படுகின்ற பராசக்தியான இறைவியே அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் ஆதியாகவும் அவருக்கு வெளியில் அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் ஆதியாகவும் இருக்கின்றாள். அப்போது பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஜோதி வடிவமாகிய தனது ஆன்மாவும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களுக்கு அசையா சக்தியாகிய பரம்பொருளில் இருந்து முதன் முதலில் ஆசையினால் பிரிந்து வந்த சாதகரின் ஆன்மாவுக்கு உள்ளே இறைவனை விட்டு பிரிவதற்கு முழுமுதல் காரணமாகவும் ஆணி வேராகவும் இருக்கின்ற ஆசையை முழுவதுமாக அறுத்து மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்கி அருளுகின்றாள் இறைவி.

பாடல் #1402

பாடல் #1402: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உண்டாம தோமுக முத்தம மானது
கண்டவிச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகமைந்து கூறுங் கரங்களு
மொன் றிரண்டாகவே மூன்றுநா லானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணடாம தொமுக முததம மானது
கணடவிச சததி சதாசிவ நாயகி
கொணட முகமைநது கூறுங கரஙகளு
மொன றிரணடாகவெ மூனறுநா லானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உண்டு ஆம் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.

பதப்பொருள்:

உண்டு (இறைவியின் பேரொளியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள் இறைவியின் அருளால் உருவாகும்) ஆம் (சக்தியின் அம்சமே) அதோ (இறைவனின் ஆறாவது முகமான அதோ) முகம் (முகமாக) உத்தமம் (எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை) ஆனது (நிலை ஆகின்றது)
கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இச் (இந்த) சத்தி (இறைவியே) சதாசிவ (அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு) நாயகி (அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள்)
கொண்ட (அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்கு சரிசமமாகுவதற்கு எடுத்துக் கொண்ட) முகம் (முகங்கள்) ஐந்து (ஐந்து முகங்களாகவும்) கூறும் (அதனோடு சேர்ந்து இயங்குகின்ற) கரங்களும் (கரங்கள்)
ஒன்று (ஒன்றும்) இரண்டு (இரண்டும்) ஆகவே (கூட்டி அதோடு) மூன்று (மூன்றும்) நாலு (நான்கும் கூட்டி மொத்தம்) ஆனதே (பத்து கரங்களாக ஆகின்றது).

விளக்கம்:

பாடல் #1401 இல் உள்ளபடி இறைவியின் பேரொளியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள் இறைவியின் அருளால் உருவாகும் சக்தியின் அம்சமே இறைவனின் ஆறாவது முகமான அதோ முகமாக எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை நிலை ஆகின்றது. சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள். அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்கு சரிசமமாகுவதற்கு எடுத்துக் கொண்ட முகங்கள் ஐந்து முகங்களாகவும் அதனோடு சேர்ந்து இயங்குகின்ற பத்து கரங்களாகவும் ஆகின்றார்.

கருத்து:

அண்ட சராசரங்களை தனது ஆறாவது முகமான அதோமுகத்தால் தாங்கி இருக்கின்ற இறைவன் அதிலுள்ள அனைத்து உலகங்களிலும் ஐந்து விதமான தொழில்களைப் புரிவதற்கு ஐந்து விதமான முகங்களை கொண்டு இருக்கின்றார். இறைவனோடு ஒன்றாக கலப்பதற்கு சாதகரும் இதே நிலையை அடைய வேண்டும் என்று இறைவி சாதகருக்கு அதோமுகத்தில் உன்னதமான நிலையையும் ஐந்து முகங்களையும் பத்து கரங்களையும் கொடுத்து அருளுகின்றாள்.

ஐந்து முகங்களும் அதன் தொழில்களும்:

  1. சத்யோ சோதம் – படைத்தல்
  2. வாமதேவம் – காத்தல்
  3. அகோரம் – அழித்தல்
  4. தற்புருடம் – மறைத்தல்
  5. ஈசானம் – அருளல்

பாடல் #1403

பாடல் #1403: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்
பன்மணி நாகமழுக் கத்தி பந்தாகுங்
கன்மணி தாமரை கையிற் றமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நனமணி சூலங கபாலங கிளியுடன
பனமணி நாகமழுக கததி பநதாகுங
கனமணி தாமரை கையிற றமருகம
பொனமணி பூணாரம பூசனை யானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழு கத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே.

பதப்பொருள்:

நல் (நன்மையை அருளும் இறைவியின் திருக்கரங்களில் தூய்மையான) மணி (ரத்தின மணிகளை பதித்த) சூலம் (திரிசூலமும்) கபாலம் (மண்டையோடும்) கிளியுடன் (கிளியும்)
பல் (பலவிதமான) மணி (ரத்தின மணிகளை பதித்த) நாகம் (நாகமும்) மழு (கோடரியும்) கத்தி (கத்தியும்) பந்து (பந்தும்) ஆகும் (ஆயுதமாகவும்)
கல் (கல்லில்) மணி (ரத்தின மணிகளை பதித்த) தாமரை (தாமரை மலரும்) கையில் (தாங்கி இருக்கின்ற திருக்கரங்களில்) தமருகம் (தமருகமும்)
பொன் (தங்கத்தில்) மணி (ரத்தின மணிகளால்) பூண் (சேர்த்துப் பூட்டிய) ஆரம் (மாலையும்) பூசனை (ஆகிய பொருட்கள் அனைத்துமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத்) ஆனதே (தகுந்தது ஆகும்).

விளக்கம்:

பாடல் #1402 இல் உள்ளபடி நன்மையை அருளும் இறைவியின் பத்து திருக்கரங்களில் தூய்மையான ரத்தின மணிகளை பதித்த 1. திரிசூலமும் 2. மண்டையோடும் 3. கிளியும் 4. பலவிதமான ரத்தின மணிகளை பதித்த நாகமும் 5. கோடரியும் 6. கத்தியும் 7. பந்தும் ஆயுதமாகவும் 8. கல்லில் ரத்தின மணிகளை பதித்த தாமரை மலரும் 9. தமருகமும் 10. தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்து இருக்கின்றாள். இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் பத்து பொருட்களுமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும்.

குறிப்பு:

முருகனின் வேலை வணங்குவது முருகப் பெருமானை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுவது போலவே இங்கே இறைவியின் திருக்கரங்களில் இருக்கின்ற பத்து பொருளையும் வணங்குதல் இறைவியை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுகிறது.

பாடல் #1404

பாடல் #1404: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பூசனை சத்திக ளெண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பது நேரதாக்
காசினி சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசனை சததிக ளெணணைவர சூழவெ
நெசவள கனனிகள நாறபது நெரதாக
காசினி சககரத துளளெ கலநதவள
மாசடை யாமல மகிழநதிருந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசனை சத்திகள் எண் ஐவர் சூழவே
நேச அவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே.

பதப்பொருள்:

பூசனை (இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) எண் (எட்டும்) ஐவர் (ஐந்தும் பெருக்கினால் வரும் மொத்தம் நாற்பது பேரும்) சூழவே (சூழ்ந்து இருக்க)
நேச (அவர்கள் நேசிக்கின்ற) அவள் (இறைவி நடுவில் வீற்றிருக்கின்றாள்) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும் கூட்டி வரும் மொத்தம் நாற்பது பேரும்) நேர் (இறைவிக்கு சரிசமமாக) அதாய் (அருளுபவர்களாக இருக்கின்றார்கள்)
காசினி (இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள்) சக்கரத்து (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு) கலந்து (ஒன்றாகக் கலந்து) அவள் (அவளது அருளால்)
மாசு (தாங்கள் கழிக்கும் எந்த கர்ம வினைகளினாலும் மாசு வந்து) அடையாமல் (சேர்ந்து விடாமலும்) மகிழ்ந்து (கர்ம வினைகளை கழித்து உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும்) இருந்தார்களே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1403 இல் உள்ளபடி இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும் நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கின்றாள். என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்கு சரிசமமாக அருளுபவர்களாக இருக்கின்றார்கள். பாடல் #1401 இல் உள்ளபடி இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலந்து அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்கு சரிசமமாக இருக்கின்ற பத்து பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களை தீர்க்கும் போது அதனால் எந்தவிதமான மாசும் வந்து சேர்ந்து விடாமலும் கர்ம வினைகளை தீர்த்து அதனால் உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள்.

பாடல் #1405

பாடல் #1405: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திட
வேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாரதி னுளளெ தயஙகிய சொதியைப
பாரதி னுளளெ பரநது ளெழுநதிட
வெரதுவ வொனறி நினறெணணு மனொமயங
காரது பொலக கலநதெழு மணணிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தார் அதின் உள்ளே தயங்கிய சோதியை
பார் அதின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே.

பதப்பொருள்:

தார் (சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அதின் (மலரின்) உள்ளே (உள்ளே இருந்து) தயங்கிய (சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற) சோதியை (ஜோதியை)
பார் (சாதகர் இருக்கின்ற உலகம்) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம்) பரந்து (பரந்து சென்று) உள் (அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற) எழுந்திட (ஜோதியோடு எழுந்திட)
வேர் (அந்த ஜோதியின் ஆதாரமாக) அது (சாதகரின் உள்ளே இருக்கின்ற ஜோதியும்) ஒன்றி (ஒன்றாக சேர்ந்து) நின்று (நிற்கும் படி) எண்ணு (எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின்) மனோமயம் (மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி)
கார் (மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக) அது (பொழிவது) போல (போலவே) கலந்து (சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து) எழு (எழுந்து) மண்ணிலே (அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது).

விளக்கம்:

சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே இருந்து சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதியை சாதகர் இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பரந்து சென்று அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும். இதற்கு ஆதாரமாக சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாக சேர்ந்து நிற்கும் படி எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின் மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக பொழிவது போலவே சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து எழுந்து அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது.

பாடல் #1406

பாடல் #1406: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மண்ணி லெழுந்த வகார வுகாரங்கள்
விண்ணி லெழுந்து சிவாய நமவென்று
தண்ணி லெழுந்தது காண்பரி தென்றுதான்
கண்ணி லெழுந்தது காட்சிதர வென்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மணணி லெழுநத வகார வுகாரஙகள
விணணி லெழுநது சிவாய நமவெனறு
தணணி லெழுநதது காணபரி தெனறுதான
கணணி லெழுநதது காட்சிதர வெனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நம என்று
தண்ணில் எழுந்தது காண்பு அரிது என்று தான்
கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.

பதப்பொருள்:

மண்ணில் (சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து) எழுந்த (எழுந்து இருக்கும் ஜோதியே) அகார (ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும்) உகாரங்கள் (காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது)
விண்ணில் (அதுவே ஆகாயத்தில்) எழுந்து (எழுந்து வீற்றிருக்கும் போது) சிவாய (இறைவனாகவே ‘சிவாய’ என்று அழைத்து) நம (‘நம’ என்று வணங்குவதற்கு) என்று (என்றும்)
தண்ணில் (கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும்) எழுந்தது (எழுந்து இருக்கின்றது) காண்பு (இந்த ஜோதியை உருவமாக பாரப்பது) அரிது (இயலாது) என்று (என்ற காரணத்தால்) தான் (உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது)
கண்ணில் (சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே) எழுந்தது (எழுந்து வந்து) காட்சி (அருள் காட்சியை) தர (அருளவும்) என்றே (காரணமாக இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1405 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து எழுந்து இருக்கும் ஜோதியே ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும் காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது. அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும் போது இறைவனாகவே ‘சிவாயநம’ என்று வணங்குபவர்களுக்கு கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும் இருக்கின்றது. இந்த ஜோதியை உருவமாக பார்ப்பது இயலாது என்ற காரணத்தால் உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்து வந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கின்றது.

உட்கருத்து:

இறை நிலையில் வீற்றிருக்கும் சாகதருக்குள் இருக்கும் ஜோதியானது உலகம் முழுவதும் இருக்கின்ற உயிர்களுக்குள் சென்று மாயை நீங்கி இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே படைத்தல் தொழிலாகும். அவ்வாறு எண்ணிக் கொண்டு வணங்கும் உயிர்கள் மீண்டும் மாயையில் சிக்கிக் கொள்ளாமல் காத்து அருளுவதே காத்தல் தொழிலாகும். இந்த இரண்டு தொழில்களையும் இறை நிலையில் இருந்து சாதகர் செய்வதால் அவரது ஜோதியை இறைவனாகவே வணங்கும் உயிர்களுக்கும் ஜோதி தரிசனத்தையும் கிடைப்பதற்கு அரியதான அமைதியையும் வழங்கும் நிலையில் இருக்கின்றார்.

பாடல் #1407

பாடல் #1407: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

என்றங் கிருந்த வமுதக் கலையிடைச்
சென்றங் கிருந்த வமுதப் பயோதரி
கண்ட கரமிரு வெள்ளிபொன் மண்டையாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண வமுதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எனறங கிருநத வமுதக கலையிடைச
செனறங கிருநத வமுதப பயொதரி
கணட கரமிரு வெளளிபொன மணடையாயக
கொணடங கிருநதது வணண வமுதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

என்று அங்கு இருந்த அமுத கலை இடை
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்ட கரம் இரு வெள்ளி பொன் மண்டை ஆய்
கொண்டு அங்கு இருந்தது வண்ண அமுதமே.

பதப்பொருள்:

என்று (ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று) அங்கு (உயிர்களுக்குள்) இருந்த (இருந்த சாதகரின் ஜோதியானது) அமுத (அமிழ்தம்) கலை (செயல் பட்டுக் கொண்டு இருக்கும்) இடை (மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு)
சென்று (உள்ளே சென்று) அங்கு (அங்கே) இருந்த (வீற்றிருக்கின்ற) அமுத (அமிழ்தத்தினால்) பயோதரி (உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை)
கண்ட (தரிசித்து) கரம் (அங்கு கரங்களாக இருக்கின்ற) இரு (இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) வெள்ளி (வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து) பொன் (அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றி) மண்டை (அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று) ஆய் (ஜோதி வடிவம்)
கொண்டு (கொண்டு) அங்கு (அங்கே) இருந்தது (இருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள்) வண்ண (தனது திருமேனி) அமுதமே (அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1406 இல் உள்ளபடி தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது அமிழ்தம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு உள்ளே சென்று அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை தரிசித்து அங்கு கரங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றிகின்றது. அதன் பிறகு அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்.

பாடல் #1408

பாடல் #1408: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அமுத மதாக வழகிய மேனி
படிக மதாகப் பரந்தெழு முள்ளே
குமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுத மதாகிய கேடிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமுத மதாக வழகிய மெனி
படிக மதாகப பரநதெழு முளளெ
குமுத மதாகக குளிரநதெழு முததுக
கெழுத மதாகிய கெடிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழும் முத்துக்கு
எழுதம் அது ஆகிய கேடு இலி தானே.

பதப்பொருள்:

அமுதம் (அமிழ்தம்) அது (எனும் பொருள்) ஆக (ஆகவே மாறி இருக்கும் இறைவியின்) அழகிய (பேரழகுடைய) மேனி (திருமேனியானது)
படிகம் (பளிங்குக் கல்லை) அது (போலவே) ஆக (உறுதியாக) பரந்து (சாதகரை வணங்கும் உயிர்களுக்குள் பரந்து விரிந்து) எழும் (எழுந்து) உள்ளே (உள்ளுக்குள்)
குமுதம் (அல்லி எனும்) அது (மலரைப்) ஆக (போலவே) குளிர்ந்து (குளிர்ச்சியுடன்) எழும் (மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை) முத்துக்கு (முத்துப் போன்ற)
எழுதம் (வடிவமாகவும்) அது (உறுதியான கல்லாகவும்) ஆகிய (ஆக்கி) கேடு (அதற்கு எந்த விதமான தீங்கும்) இலி (இல்லாத) தானே (சக்தியாகிறது).

விளக்கம்:

பாடல் #1407 இல் உள்ளபடி அமிழ்தமாகவே மாறி இருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது பளிங்குக் கல்லை போலவே உறுதியாக சாதகருக்குள் பரந்து விரிந்து எழுந்து அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆக்கி அதற்கு எந்த விதமான தீங்கும் இல்லாத சக்தியாகிறது.