பாடல் #268: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.
விளக்கம்:
உலகில் உள்ள அனைத்தும் உருவாவதற்கும் அழிந்து போவதற்கும் காரணமான தூய்மையான புகழுடைய இறைவன் நீதிநெறி தவறி அறம் ஆகியவற்றை கடைபிடிக்காமல் வாழும் உயிர்களுக்கு இன்பத்தை நினைத்து பார்க்கக்கூட விடமாட்டான். பசி என்று வருபவர்களுக்கு உணவு அளித்து இல்லை என்று வருபவர்களுக்குத் தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவ வேண்டும் என்பதும் இன்பம் தரக்கூடியவை என்பதை உணர்ந்து அவற்றை செய்து வாழுங்கள். அப்படி இல்லாமல் பிற உயிர்களுக்குத் துன்பத்தைத் தரும்படியான காரியங்களைச் செய்து வாழ்வது மிருக வாழ்க்கையைப் போலத்தான் இருக்கும்.
