பாடல் #1619

பாடல் #1619: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

உழவனு ழவுழ வானம் வழங்க
வுழவனு ழவினிற் பூத்த குவளை
யுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்
டுழவன தனையுழ வொழிந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழவனு ழவுழ வானம வழஙக
வுழவனு ழவினிற பூதத குவளை
யுழவனு ழததியர கணணொககு மெனறிட
டுழவன தனையுழ வொழிந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.

பதப்பொருள்:

உழவன் (இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி) உழ (தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய) உழ (செய்ய) வானம் (ஆகாயத்திலிருந்து இறைவனின்) வழங்க (அருளானது மழை போல் அவருக்கு கிடைத்து)
உழவன் (உழவனாகிய துறவி) உழவினில் (செய்த உழவாகிய சாதனையில்) பூத்த (இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று) குவளை (அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது)
உழவன் (அப்போது உழவனாகிய துறவி) உழத்தியர் (தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த) கண் (இறை சக்திக்கு) ஒக்கும் (ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது) என்று (என்று) இட்டு (அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி)
உழவன் (உழவனாகிய துறவி) அதனை (அந்த சக்தியைக் கொண்டே) உழவு (தான் செய்கின்ற கொள்கையை) ஒழிந்தானே (விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1618 இல் உள்ளபடி இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய செய்ய ஆகாயத்திலிருந்து இறைவனின் அருளானது மழை போல் அவருக்கு கிடைக்கின்றது. அப்போது உழவனாகிய துறவி செய்த உழவாகிய சாதனையில் இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு உழவனாகிய துறவி தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது என்று அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி அந்த சக்தியைக் கொண்டே தான் செய்கின்ற கொள்கையை விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.

பாடல் #1618

பாடல் #1618: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடுங கடமையுங கெடடுவந தைவரு
நாடி வளைநதது நான கடைவெனல
னாடல விடையுடை யணணல திருவடி
கூடுந தவஞசெயத கொளகைதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடும் கடமையும் கேட்டு வந்த ஐவரும்
நாடி வளைந்த அது நான் கடைவேன் அலன்
ஆடல் விடை உடை அண்ணல் திரு அடி
கூடும் தவம் செய்த கொள்கை தந்தானே.

பதப்பொருள்:

கேடும் (பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும்) கடமையும் (அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும்) கேட்டு (இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு) வந்த (பிறவியோடு கூட வந்த) ஐவரும் (ஐந்து புலன்களும்)
நாடி (அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே) வளைந்த (வளைந்து என்னை நடக்க) அது (வைக்கின்றதை) நான் (யான்) கடைவேன் (கடைபிடிப்பது) அலன் (இல்லை)
ஆடல் (தில்லையில் ஆடுகின்ற) விடை (விடை வாகனமாகிய நந்தியை) உடை (உடையவனாகிய) அண்ணல் (இறைவனின்) திரு (மதிப்பிற்குரிய) அடி (திருவடிகளை)
கூடும் (சென்று அடைகின்ற) தவம் (தவமுறையான) செய்த (இந்த செயலை) கொள்கை (செய்கின்ற கொள்கையை) தந்தானே (இறைவன் எமக்குத் தந்து அருளினான்).

விளக்கம்:

பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும் அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு பிறவியோடு கூட வந்த ஐந்து புலன்களும் அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே வளைந்து என்னை நடக்க வைக்கின்றதை யான் கடைபிடிப்பது இல்லை. தில்லையில் ஆடுகின்ற விடை வாகனமாகிய நந்தியை உடையவனாகிய இறைவனின் மதிப்பிற்குரிய திருவடிகளை சென்று அடைகின்ற தவமுறையான இந்த செயலை செய்கின்ற கொள்கையை இறைவன் எமக்குத் தந்து அருளினான்.

பாடல் #1617

பாடல் #1617: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெறியைப படைததா னெருஞசில படைததா
னெறியில வழுவில நெருஞசில முடபாயு
நெறியில வழுவா தியஙகவல லாரககு
நெறியில நெருஞசில முடபாயகில லாவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவில் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முள் பாய இல்லாவே.

பதப்பொருள்:

நெறியை (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை) படைத்தான் (படைத்தான் இறைவன்) நெருஞ்சில் (அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும்) படைத்தான் (படைத்தான் இறைவன்)
நெறியில் (கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவில் (சிறிது விலகி நடந்தாலும்) நெருஞ்சில் (அந்த கடினமான) முள் (முள் போன்ற துன்பங்களும்) பாயும் (பாய்ந்து சாதகருக்கு நினைவூட்டும்)
நெறியில் (சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவாது (விலகி விடாமல்) இயங்க (செயல் பட) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
நெறியில் (அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில்) நெருஞ்சில் (ஒரு பொழுதும் கடினமான) முள் (முள்கள் போன்ற துன்பங்கள்) பாய (பாய்வது) இல்லாவே (இருக்காது).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை படைத்த இறைவனே அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும் படைத்தான். கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து சிறிது விலகி நடந்தாலும் அந்த கடினமான முள் போன்ற துன்பங்களும் பாய்ந்து சாதகருக்கு அவர்கள் வழி தவறி செல்வதை நினைவூட்டும். சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து விலகி விடாமல் செயல் பட முடிந்தவர்களுக்கு அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.

பாடல் #1616

பாடல் #1616: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறவன பிறபபிலி யாரு மிலலாதா
னுறைவது காடடக முணபது பிசசை
துறவனுங கணடீர துறநதவர தமமைப
பிறவி யறுததிடும பிததனகண டீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறவன் பிறப்பு இலி யாரும் இல்லாதான்
உறைவது காட்ட அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.

பதப்பொருள்:

அறவன் (அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும்) பிறப்பு (பிறப்பு என்பதே) இலி (இல்லாதவனும்) யாரும் (தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும்) இல்லாதான் (இல்லாதவனும்)
உறைவது (ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை) காட்ட (உணர்வதற்கு) அகம் (உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது) உண்பது (தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற) பிச்சை (ஞானத்தினால்)
துறவனும் (தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும்) கண்டீர் (பார்த்தீர்கள்) துறந்தவர் (அப்படி பார்த்த அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற) தம்மை (அடியவர்கள் தம்முடைய)
பிறவி (பிறவிகளை) அறுத்திடும் (அறுத்து நீக்கிவிடும்) பித்தன் (இறைவனும் அவனே) கண்டீரே (என்பதையும் துறவிகள் காண்பார்கள்).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற ஞானத்தினால் தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற அடியவர்கள் தம்முடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

கருத்து:

தமக்குள்ளே மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்வதற்கு ஆன்மாவானது ஞானத்தை அறிந்து உணர்ந்து தகுதி பெறுகின்றது. அப்படி தகுதி பெற்று தமக்குள் உணர்ந்த இறைவனைப் போலவே நீங்களும் அனைத்தையும் துறந்து ஞானத்தை பற்றிக் கொண்டு இருந்தால் உங்களின் பிறவிகளை இறைவன் அறுத்து விடுவதையும் காண்பீர்கள்.

பாடல் #1615

பாடல் #1615: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே
மறந்து மலவிரு ணீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறநது மிறநதும பலபெதைமை யாலெ
மறநது மலவிரு ணீஙக மறைநது
சிறநத சிவனருள செர பருவததுத
துறநத வுயிரககுச சுடரொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை ஆலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே.

பதப்பொருள்:

பிறந்தும் (பிறவி எடுத்தும்) இறந்தும் (இறந்தும்) பல் (பல முறை எடுக்கும் பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற) பேதைமை (அறிவு) ஆலே (இல்லாததால்)
மறந்து (தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து இருக்கின்ற) மல (மாயையாகிய மலத்தின்) இருள் (இருளானது) நீங்க (தம்மை விட்டு நீங்கி) மறைந்து (மறைந்து போகும் படி)
சிறந்த (சிறப்பான) சிவன் (இறைவனின்) அருள் (பேரருளை) சேர் (அடைகின்ற) பருவத்து (காலத்தில்)
துறந்த (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) சுடர் (இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர்) ஒளி (ஒளி) ஆமே (ஆக விளங்கும்).

விளக்கம்:

பல முறைகள் பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததால் தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அப்போது அவர்களை விட்டு அந்த இருளானது நீங்கி மறைந்து போகும் படி சிறப்பான இறைவனின் பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

பாடல் #1614

பாடல் #1614: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறபபும பிறபபு மிருமையு நீஙகித
துறககுந தவஙகணட சொதிப பிரானை
மறபபில ராயநிததம வாயமொழி வாரகட
கறபபதி காடடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு
அற பதி காட்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

இறப்பும் (இறப்பு) பிறப்பும் (பிறப்பு) இருமையும் (ஆகிய இரண்டு விதமான தன்மைகளும்) நீங்கி (நீங்கி விட)
துறக்கும் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய) தவம் (தவ நிலையில்) கண்ட (சாதகர் கண்ட) சோதி (ஜோதி மயமாகிய) பிரானை (இறைவனை)
மறப்பு (மறந்து விடுவதே) இலர் (இல்லாதவர்கள்) ஆய் (ஆக) நித்தம் (எப்போதும்) வாய் (தமது வாயால்) மொழிவார்களுக்கு (சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு)
அற (தர்மம் இருக்கின்ற) பதி (இடமாகிய சிவலோகத்தை) காட்டும் (காட்டி அருளுவான்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1613

பாடல் #1613: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரைப் பற்றுப் பரஞான
மாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலைச சொரூபஙகள மூனறு மிகுசததி
பாலிதத முததிரைப பறறுப பரஞான
மாலிதத நாடடமெ ஞெயம பகுததறற
மூலச சொரூபன மொழிஞா துருவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பர ஞானம்
ஆலித்த நாட்டமே ஞேயம் பகுத்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே.

பதப்பொருள்:

மேலை (அனைத்திற்கும் மேலே இருக்கின்ற) சொரூபங்கள் (இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற) மூன்று (பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும்) மிகு (மேலான) சத்தி (சக்தியாகிய இறைவன்)
பாலித்த (தம்முடைய திருவருளால் அருளிய) முத்திரை (இந்த மூன்று திரைகளையும்) பற்றும் (தெரிந்து கொள்ளும்) பர (பரம் பொருளின்) ஞானம் (பேரறிவு ஞானம் கிடைக்கப் பெற்று)
ஆலித்த (தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை) நாட்டமே (பார்த்து உணர்ந்து) ஞேயம் (அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன்) பகுத்து (என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை) அற்ற (இல்லாமல் போய்)
மூல (அனைத்திற்கும் மூலமாகிய) சொரூபன் (இறைவனின் சொரூபமாக) மொழி (இருக்கின்ற பொருள்) ஞாதுருவனே (பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன் தம்முடைய திருவருளால் அருளிய இந்த மூன்று திரைகளையும் தெரிந்து கொள்ளும் பரம் பொருளின் பேரறிவு ஞானம் கிடைக்கப் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம் தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை பார்த்து உணர்ந்து அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன் என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் போய் அனைத்திற்கும் மூலமாகிய இறைவனின் சொரூபமாக இருக்கின்ற பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்.

கருத்து:

பார்க்கின்றவனாகிய சாதகர் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளை பார்ப்பதற்கான ஞானத்தை இறைவனின் திருவருளால் பெற்று தாம் பார்க்கின்ற அந்த மூலப் பரம்பொருளாக தாமே இருப்பதை உணர்ந்து கொள்வார்.

பாடல் #1612

பாடல் #1612: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததிரை மூனறின முடிநதது மூனறினபால
வைதத கலைகாலை நானமடங கானமாறறி
யுயதத தவததாநதத தொணகுரு பாதததெ
பெதத மறுததொர பிறநதிற வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை காலை நான் மடங்கால் மாற்றி
உய்த்த தவத்து அந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.

பதப்பொருள்:

முத் (மூன்று) திரை (திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள்) மூன்றின் (ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற) முடிந்தது (மாயை முடிந்து விடுவதற்கு) மூன்றின் (இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின்) பால் (மூலம்)
வைத்த (இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய) கலை (மூச்சுக்காற்றின்) காலை (போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து) நான் (நான்கு) மடங்கால் (விரற்கடை / அங்குலம் அளவிற்கு) மாற்றி (மேல் நோக்கி மாற்றி)
உய்த்த (உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து) தவத்து (செய்கின்ற தவத்தில்) அந்தத்து (முழுமை பெற்ற நிலையில்) ஒண் (சாதகரோடு ஒன்றி இருக்கின்ற) குரு (குருநாதராகிய இறைவனின்) பாதத்தே (திருவடிகளைப் பெற்று)
பெத்தம் (பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும்) அறுத்தோர் (அறுத்து விட்டவர்கள்) பிறந்து (இனி பிறக்கவோ) இறவாரே (இறக்கவோ மாட்டார்கள்).

விளக்கம்:

மூன்று திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற மாயை முடிந்து விடுவதற்கு இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலம் இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து நான்கு விரற்கடை அளவிற்கு மேல் நோக்கி மாற்றி உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து செய்கின்ற தவத்தில் முழுமை பெற்ற நிலையில் சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனின் திருவடிகளைப் பெற்று பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும் அறுத்து விட்டவர்கள் இனி பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.

பாடல் #1611

பாடல் #1611: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடு
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்கு
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மொனஙகை வநதொரககு முததியுங கைகூடு
மொனஙகை வநதொரககுச சிததியு முனனிறகு
மொனஙகை வநதூமை யாமொழி முறறுஙகாண
மொனஙகை வநதைங கருமமு முனனுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்கு சித்தியும் உன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் உன்னுமே.

பதப்பொருள்:

மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) முத்தியும் (முக்தி நிலையும்) கை (கை) கூடும் (கூடும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) சித்தியும் (அனைத்து விதமான சித்திகளும்) உன் (அவர்களுக்குள்) நிற்கும் (நிலைத்து நிற்கும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஊமையாம் (உடல் அசைவுகளால்) மொழி (பேசுகின்ற மொழி) முற்றும் (முழுவதும் நீங்கி விடுவதை) காண் (காணலாம்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஐங் (உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான) கருமமும் (தொழில்களையும்) உன்னுமே (தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்).

விளக்கம்:

பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும் படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கை கூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழி கூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கி விடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.