பாடல் #1615

பாடல் #1615: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே
மறந்து மலவிரு ணீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறநது மிறநதும பலபெதைமை யாலெ
மறநது மலவிரு ணீஙக மறைநது
சிறநத சிவனருள செர பருவததுத
துறநத வுயிரககுச சுடரொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை ஆலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே.

பதப்பொருள்:

பிறந்தும் (பிறவி எடுத்தும்) இறந்தும் (இறந்தும்) பல் (பல முறை எடுக்கும் பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற) பேதைமை (அறிவு) ஆலே (இல்லாததால்)
மறந்து (தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து இருக்கின்ற) மல (மாயையாகிய மலத்தின்) இருள் (இருளானது) நீங்க (தம்மை விட்டு நீங்கி) மறைந்து (மறைந்து போகும் படி)
சிறந்த (சிறப்பான) சிவன் (இறைவனின்) அருள் (பேரருளை) சேர் (அடைகின்ற) பருவத்து (காலத்தில்)
துறந்த (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) சுடர் (இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர்) ஒளி (ஒளி) ஆமே (ஆக விளங்கும்).

விளக்கம்:

பல முறைகள் பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததால் தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அப்போது அவர்களை விட்டு அந்த இருளானது நீங்கி மறைந்து போகும் படி சிறப்பான இறைவனின் பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.