பாடல் #1618

பாடல் #1618: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடுங கடமையுங கெடடுவந தைவரு
நாடி வளைநதது நான கடைவெனல
னாடல விடையுடை யணணல திருவடி
கூடுந தவஞசெயத கொளகைதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடும் கடமையும் கேட்டு வந்த ஐவரும்
நாடி வளைந்த அது நான் கடைவேன் அலன்
ஆடல் விடை உடை அண்ணல் திரு அடி
கூடும் தவம் செய்த கொள்கை தந்தானே.

பதப்பொருள்:

கேடும் (பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும்) கடமையும் (அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும்) கேட்டு (இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு) வந்த (பிறவியோடு கூட வந்த) ஐவரும் (ஐந்து புலன்களும்)
நாடி (அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே) வளைந்த (வளைந்து என்னை நடக்க) அது (வைக்கின்றதை) நான் (யான்) கடைவேன் (கடைபிடிப்பது) அலன் (இல்லை)
ஆடல் (தில்லையில் ஆடுகின்ற) விடை (விடை வாகனமாகிய நந்தியை) உடை (உடையவனாகிய) அண்ணல் (இறைவனின்) திரு (மதிப்பிற்குரிய) அடி (திருவடிகளை)
கூடும் (சென்று அடைகின்ற) தவம் (தவமுறையான) செய்த (இந்த செயலை) கொள்கை (செய்கின்ற கொள்கையை) தந்தானே (இறைவன் எமக்குத் தந்து அருளினான்).

விளக்கம்:

பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும் அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு பிறவியோடு கூட வந்த ஐந்து புலன்களும் அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே வளைந்து என்னை நடக்க வைக்கின்றதை யான் கடைபிடிப்பது இல்லை. தில்லையில் ஆடுகின்ற விடை வாகனமாகிய நந்தியை உடையவனாகிய இறைவனின் மதிப்பிற்குரிய திருவடிகளை சென்று அடைகின்ற தவமுறையான இந்த செயலை செய்கின்ற கொள்கையை இறைவன் எமக்குத் தந்து அருளினான்.

பாடல் #1619

பாடல் #1619: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

உழவனு ழவுழ வானம் வழங்க
வுழவனு ழவினிற் பூத்த குவளை
யுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்
டுழவன தனையுழ வொழிந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழவனு ழவுழ வானம வழஙக
வுழவனு ழவினிற பூதத குவளை
யுழவனு ழததியர கணணொககு மெனறிட
டுழவன தனையுழ வொழிந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.

பதப்பொருள்:

உழவன் (இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி) உழ (தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய) உழ (செய்ய) வானம் (ஆகாயத்திலிருந்து இறைவனின்) வழங்க (அருளானது மழை போல் அவருக்கு கிடைத்து)
உழவன் (உழவனாகிய துறவி) உழவினில் (செய்த உழவாகிய சாதனையில்) பூத்த (இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று) குவளை (அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது)
உழவன் (அப்போது உழவனாகிய துறவி) உழத்தியர் (தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த) கண் (இறை சக்திக்கு) ஒக்கும் (ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது) என்று (என்று) இட்டு (அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி)
உழவன் (உழவனாகிய துறவி) அதனை (அந்த சக்தியைக் கொண்டே) உழவு (தான் செய்கின்ற கொள்கையை) ஒழிந்தானே (விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1618 இல் உள்ளபடி இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய செய்ய ஆகாயத்திலிருந்து இறைவனின் அருளானது மழை போல் அவருக்கு கிடைக்கின்றது. அப்போது உழவனாகிய துறவி செய்த உழவாகிய சாதனையில் இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு உழவனாகிய துறவி தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது என்று அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி அந்த சக்தியைக் கொண்டே தான் செய்கின்ற கொள்கையை விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.

பாடல் #1620

பாடல் #1620: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்
நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலதுறந தணணல விளஙகொளி கூறுவன
நாளதுறந தாரககவ னணப னவாவலி
காரதுறந தாரககவன கணணுத லாயநிறகும
பாரதுறந தாரககெ பதஞசெயய லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூறுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா வலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதல் ஆய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செய்யல் ஆமே.

பதப்பொருள்:

மேல் (துறவின் மேலான நிலையில்) துறந்து (தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன்) விளங்கு (உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற) ஒளி (ஒளியாக) கூறுவன் (உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான்)
நாள் (அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவனே) நண்பன் (உற்ற நண்பனாக இருப்பான்) அவா (ஆசைகள்) வலி (எனும் வலிமை மிக்க)
கார் (மாய இருளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவன்) கண் (ஞானமாகிய) நுதல் (நெற்றிக் கண்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று அருளுவான்)
பார் (அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும்) துறந்தார்க்கே (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே) பதம் (இறை நிலையை அடையும் பக்குவத்தை) செய்யல் (செய்து கொடுத்து) ஆமே (அருளுவான் இறைவன்).

விளக்கம்:

பாடல் #1619 இல் உள்ளபடி துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன் உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான். அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே இறை நிலையை அடையும் பக்குவத்தை செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.

பாடல் #1621

பாடல் #1621: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நாகமு மொன்று படமைந்தி னாலது
போகமாழ் புற்றிற் பொருந்தி நிறைந்தது
வாக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேக படஞ்செய் துடம்பிட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாகமு மொனறு படமைநதி னாலது
பொகமாழ புறறிற பொருநதி நிறைநதது
வாக மிரணடும படமவிரித தாடடொழிந
தெக படஞசெய துடமபிட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாகமும் ஒன்று படம் ஐந்தின் ஆல் அது
போகம் ஆழ் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடல் ஆமே.

பதப்பொருள்:

நாகமும் (உயிர்களின் உடல்) ஒன்று (ஒன்று) படம் (அதன் உணர்வுகள்) ஐந்தின் (பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்கள்) ஆல் (ஆல்) அது (கட்டி இழுக்கப் பட்டு)
போகம் (அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே) ஆழ் (ஆழ்ந்து) புற்றில் (ஆசைகளாகிய புற்றில்) பொருந்தி (பொருந்தி) நிறைந்தது (அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருந்து)
ஆகம் (தூல உடல் சூட்சும மனம் ஆகிய) இரண்டும் (இரண்டும்) படம் (தமது ஆசைகளின் வழியே படம்) விரித்து (விரித்து) ஆட்டு (ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி) ஒழிந்து (வாழ்க்கை ஒழிந்து போகின்றது)
ஏக (இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே) படம் (உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி) செய்து (செய்து) உடம்பு (அதை தமது உடலின்) இடல் (கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில்) ஆமே (வீற்றிருக்கலாம்).

விளக்கம்:

உயிர்களின் உடல் ஒன்று அதன் உணர்வுகள் பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்களால் கட்டி இழுக்கப்பட்டு அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே ஆழ்ந்து ஆசைகளாகிய புற்றில் பொருந்தி அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது. அதனால் தூல உடல் சூட்சும மனம் ஆகிய இரண்டும் தமது ஆசைகளின் வழியே படம் விரித்து ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி வாழ்க்கை ஒழிந்து போகின்றது. இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி செய்து அதை தமது உடலின் கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில் வீற்றிருக்கலாம். இந்த நிலையே துறவு ஆகும்.

பாடல் #1622

பாடல் #1622: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அகன்றார் வழிமுத லாதிப் பிரானு
மிவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகு
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகனறார வழிமுத லாதிப பிரானு
மிவனறா னெனநின றெளியனு மலலன
சிவனறான பலபல சீவனு மாகு
நயனறான வருமவழி நாமறி யொமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பல பல சீவனும் ஆகும்
நயன்று தான் வரும் வழி நாம் அறியோமே.

பதப்பொருள்:

அகன்றார் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள்) வழி (தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த) முதல் (அந்த கணம் முதலே) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானும் (அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்)
இவன் (இந்த துறவியே) தான் (தாம் தான்) என (என்று) நின்று (துறவியாகவே நின்றாலும்) எளியனும் (ஜீவாத்மா போன்ற எளியவன்) அல்லன் (இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான்)
சிவன் (அந்த பரமாத்மாவாகிய சிவனே) தான் (தான்) பல (பல) பல (பல விதமான) சீவனும் (ஜீவாத்மாக்களாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
நயன்று (ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி) தான் (தாமே) வரும் (வருகின்ற) வழி (வழி முறையை) நாம் (நாம்) அறியோமே (அறிவது இல்லை).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்த கணம் முதலே ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் இந்த துறவியே தாம் தான் என்று துறவியாகவே நின்றாலும் ஜீவாத்மா போன்ற எளியவன் இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்த பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி தாமே வருகின்ற வழி முறையை நாம் அறிவது இல்லை.

கருத்து:

அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றாலும் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற உயிர்களுக்குள் இறைவன் தமது பரமாத்ம நிலையிலியே விருப்பத்தோடு வந்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1623

பாடல் #1623: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

தூம்பு துறந்தன வொன்பது வாய்தலு
மாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டது
வேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற்
கூம்பேறிக் கோயில் பழுக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூமபு துறநதன வொனபது வாயதலு
மாமபற குழியி லகஞசுழிப படடது
வெமபெறி நொககினென மீகாமன கூறையிற
கூமபெறிக கொயில பழுககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூம்பு துறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழியில் அகம் சுழி பட்டது
வேம்பு ஏறி நோக்கின் என் மீகாமன் கூறையில்
கூம்பு ஏறி கோயில் பழுக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

தூம்பு (தமது துளைகளாகிய கர்மங்களை) துறந்தன (துறந்தன) ஒன்பது (உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது) வாய்தலும் (கர்மங்களின் செயல்களாகிய நுழை வாயில்கள்)
ஆம்பல் (இதுவரை துன்பக்) குழியில் (குழியில்) அகம் (ஆன்மாவனது) சுழி (தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே) பட்டது (அகப் பட்டுக் கொண்டு இருந்தது)
வேம்பு (கர்மங்களை துறந்த பிறகு சுழுமுனை நாடியின் வழியே) ஏறி (குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி) நோக்கின் (பார்க்கும் போது) என் (அங்கே எமது ஆன்மாவை) மீகாமன் (காக்கின்றவனாகிய இறைவனை) கூறையில் (எனது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து)
கூம்பு (சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில்) ஏறி (ஏறி) கோயில் (அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து) பழுக்கின்ற (முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை) ஆறே (அடைகின்ற வழி கிடைத்தது).

விளக்கம்:

இதுவரை துன்பக் குழியில் ஆன்மாவனது தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே அகப் பட்டுக் கொண்டு இருந்தது. அனைத்தையும் விட்டு விலகி துறவு எனும் தவ நிலையில் மேன்மை நிலையை அடையும் போது தமது உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது துளைகளாகிய கர்மங்களின் செயல்களை துறந்து விடுகின்றது. அதன் பிறகு பிறகு சுழுமுனை நாடியின் வழியே குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி பார்க்கும் போது அங்கே அவரது ஆன்மாவை காக்கின்றவனாகிய இறைவனை அவரது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில் ஏறி அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை அடைகின்ற வழி அவருக்கு கிடைத்தது.

பாடல் #1611

பாடல் #1611: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடு
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்கு
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மொனஙகை வநதொரககு முததியுங கைகூடு
மொனஙகை வநதொரககுச சிததியு முனனிறகு
மொனஙகை வநதூமை யாமொழி முறறுஙகாண
மொனஙகை வநதைங கருமமு முனனுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்கு சித்தியும் உன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் உன்னுமே.

பதப்பொருள்:

மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) முத்தியும் (முக்தி நிலையும்) கை (கை) கூடும் (கூடும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) சித்தியும் (அனைத்து விதமான சித்திகளும்) உன் (அவர்களுக்குள்) நிற்கும் (நிலைத்து நிற்கும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஊமையாம் (உடல் அசைவுகளால்) மொழி (பேசுகின்ற மொழி) முற்றும் (முழுவதும் நீங்கி விடுவதை) காண் (காணலாம்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஐங் (உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான) கருமமும் (தொழில்களையும்) உன்னுமே (தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்).

விளக்கம்:

பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும் படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கை கூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழி கூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கி விடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.

பாடல் #1612

பாடல் #1612: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததிரை மூனறின முடிநதது மூனறினபால
வைதத கலைகாலை நானமடங கானமாறறி
யுயதத தவததாநதத தொணகுரு பாதததெ
பெதத மறுததொர பிறநதிற வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை காலை நான் மடங்கால் மாற்றி
உய்த்த தவத்து அந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.

பதப்பொருள்:

முத் (மூன்று) திரை (திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள்) மூன்றின் (ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற) முடிந்தது (மாயை முடிந்து விடுவதற்கு) மூன்றின் (இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின்) பால் (மூலம்)
வைத்த (இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய) கலை (மூச்சுக்காற்றின்) காலை (போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து) நான் (நான்கு) மடங்கால் (விரற்கடை / அங்குலம் அளவிற்கு) மாற்றி (மேல் நோக்கி மாற்றி)
உய்த்த (உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து) தவத்து (செய்கின்ற தவத்தில்) அந்தத்து (முழுமை பெற்ற நிலையில்) ஒண் (சாதகரோடு ஒன்றி இருக்கின்ற) குரு (குருநாதராகிய இறைவனின்) பாதத்தே (திருவடிகளைப் பெற்று)
பெத்தம் (பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும்) அறுத்தோர் (அறுத்து விட்டவர்கள்) பிறந்து (இனி பிறக்கவோ) இறவாரே (இறக்கவோ மாட்டார்கள்).

விளக்கம்:

மூன்று திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற மாயை முடிந்து விடுவதற்கு இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலம் இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து நான்கு விரற்கடை அளவிற்கு மேல் நோக்கி மாற்றி உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து செய்கின்ற தவத்தில் முழுமை பெற்ற நிலையில் சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனின் திருவடிகளைப் பெற்று பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும் அறுத்து விட்டவர்கள் இனி பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.

பாடல் #1613

பாடல் #1613: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரைப் பற்றுப் பரஞான
மாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலைச சொரூபஙகள மூனறு மிகுசததி
பாலிதத முததிரைப பறறுப பரஞான
மாலிதத நாடடமெ ஞெயம பகுததறற
மூலச சொரூபன மொழிஞா துருவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பர ஞானம்
ஆலித்த நாட்டமே ஞேயம் பகுத்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே.

பதப்பொருள்:

மேலை (அனைத்திற்கும் மேலே இருக்கின்ற) சொரூபங்கள் (இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற) மூன்று (பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும்) மிகு (மேலான) சத்தி (சக்தியாகிய இறைவன்)
பாலித்த (தம்முடைய திருவருளால் அருளிய) முத்திரை (இந்த மூன்று திரைகளையும்) பற்றும் (தெரிந்து கொள்ளும்) பர (பரம் பொருளின்) ஞானம் (பேரறிவு ஞானம் கிடைக்கப் பெற்று)
ஆலித்த (தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை) நாட்டமே (பார்த்து உணர்ந்து) ஞேயம் (அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன்) பகுத்து (என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை) அற்ற (இல்லாமல் போய்)
மூல (அனைத்திற்கும் மூலமாகிய) சொரூபன் (இறைவனின் சொரூபமாக) மொழி (இருக்கின்ற பொருள்) ஞாதுருவனே (பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன் தம்முடைய திருவருளால் அருளிய இந்த மூன்று திரைகளையும் தெரிந்து கொள்ளும் பரம் பொருளின் பேரறிவு ஞானம் கிடைக்கப் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம் தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை பார்த்து உணர்ந்து அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன் என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் போய் அனைத்திற்கும் மூலமாகிய இறைவனின் சொரூபமாக இருக்கின்ற பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்.

கருத்து:

பார்க்கின்றவனாகிய சாதகர் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளை பார்ப்பதற்கான ஞானத்தை இறைவனின் திருவருளால் பெற்று தாம் பார்க்கின்ற அந்த மூலப் பரம்பொருளாக தாமே இருப்பதை உணர்ந்து கொள்வார்.