பாடல் #1332

பாடல் #1332: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கூறுமின் னெட்டுத் திசைக்குந் தலைவியை
மாறுமின் ணடத் தமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்
தேறுமின் னாயகி சேவடி சேர்ந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமின னெடடுத திசைககுந தலைவியை
மாறுமின ணடத தமரரகள வாழவென
மாறுமின வையம வருமவழி தனனையுந
தெறுமின னாயகி செவடி செரநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
மாறும் இன் நடத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும் வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பதப்பொருள்:

கூறுமின் (அருமைகளையும் பெருமைகளையும் போற்றி எடுத்துக் கூறுங்கள்) எட்டுத் (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலைவியை (தலைவியாக இருக்கின்ற இறைவியின்)
மாறும் (அப்போது மாறும்) இன் (இந்த) நடத்து (உலகத்தில் நன்மைகளை நடத்துகின்ற) அமரர்கள் (இறவா வாழ்க்கையைப் பெற்ற அமரர்களின்) வாழ்வென (வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும்)
மாறுமின் (அதன் படியே சாதகர்களும் மாற்றுங்கள்) வையம் (இந்த உலகத்தில்) வரும் (இயற்கையாகவே வருகின்ற) வழி (வழிகள்) தன்னையும் (அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வழிகளாக)
தேறுமின் (அதன் பிறகு முழுவதும் தெளிவாக ஆராயந்து தெரிந்து கொள்ளுங்கள்) நாயகி (அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின்) சேவடி (வணங்கத் தக்கத் திருவடிகளை) சேர்ந்தே (எப்போதும் சேர்ந்தே இருந்து).

விளக்கம்:

பாடல் #1331 இல் உள்ளபடி எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் அருமைகளையும் பெருமைகளையும் போற்றி தகுதியானவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். அப்போது இந்த உலகத்தில் நன்மைகளை நடத்துகின்ற இறப்பு இல்லாத நிலையைப் பெற்ற அமரர்களின் வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும் மாறும். அதன் படியே இந்த உலகத்தில் இயற்கையாகவே வருகின்ற வழிகள் (தாகம், பசி, தூக்கம், கழிவு வெளியேற்றம், முதுமையடைதல்) அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வழிகளாக நீங்களும் மாற்றுங்கள். அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் வணங்கத் தக்கத் திருவடிகளை எப்போதும் சேர்ந்தே இருந்து இதையெல்லாம் செய்யும் முறைகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #1333

பாடல் #1333: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சேவடி சேரச் செறிய விருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செவடி செரச செறிய விருநதவர
நாவடி யுளளெ நவினறுநின றெததுவர
பூவடி யிடடுப பொலிய விருநதவர
மாவடி காணும வகையறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகை அறிவாரே.

பதப்பொருள்:

சேவடி (இறைவியின் வணங்கத் தக்க திருவடிகளை) சேரச் (சேர்ந்தே இருந்து) செறிய (அதை இடைவிடாமல் நினைத்து பக்குவம் பெற்று) இருந்தவர் (இருக்கின்ற சாதகர்கள்)
நாவடி (தமது அடி நாக்கின்) உள்ளே (உள்ளுக்குள் வைத்து) நவின்று (மந்திரங்களை ஓதி) நின்று (தியானத்தில் இருந்து) ஏத்துவர் (போற்றி வணங்குபவர்களாகவும்)
பூவடி (இறைவியின் பூப்போன்ற திருவடிகளை) இட்டுப் (தமது மனதில் பதிய வைத்து) பொலிய (பிரகாசம் பெற்று) இருந்தவர் (இருக்கின்றவர்களாகவும்)
மாவடி (இறைவியின் மாபெரும் திருவடிகளை) காணும் (கண்டு தரிசிக்கும்) வகை (முறைகளை முழுவதும்) அறிவாரே (அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1332 இல் உள்ளபடி இறைவியின் வணங்கத் தக்க திருவடிகளை சேர்ந்தே இருந்து அதை இடைவிடாமல் நினைத்து பக்குவம் பெற்று இருக்கின்ற சாதகர்கள் தமது அடி நாக்கின் உள்ளுக்குள் வைத்து உதடு அசையாமல் நாக்கை லேசாக அசைத்து மந்திரங்களை ஓதி தியானத்தில் இருந்து போற்றி வணங்குபவர்களாகவும், இறைவியின் பூப்போன்ற திருவடிகளை தமது மனதில் பதிய வைத்து பிரகாசம் பெற்று இருக்கின்றவர்களாகவும், இறைவியின் மாபெரும் திருவடிகளை கண்டு தரிசிக்கும் முறைகளை முழுவதும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

பாடல் #1334

பாடல் #1334: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஐமுத லாக வலர்ந்தெழு சக்கரம்
மைமுத லாக வலர்ந்தி றீயீராகு
மைமுத லாகி யவற்குடை யாள்தன்னை
யைமுத லாக வளித்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஐமுத லாக வலரநதெழு சககர
மைமுத லாக வலரநதி றீயீராகு
மைமுத லாகி யவறகுடை யாளதனனை
யைமுத லாக வளிததிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஐம் முதல் ஆக அலர்ந்து எழு சக்கரம்
ஐம் முதல் ஆக அலர்ந்து இறீ ஈர் ஆகும்
ஐம் முதல் ஆகியவற்கு உடையாள் தன்னை
ஐம் முதல் ஆகவே அளித்திடு நீயே.

பதப்பொருள்:

ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தை) முதல் (முதல்) ஆக (பீஜமாக வைத்து) அலர்ந்து (பரந்து விரிந்து) எழு (எழுகின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரமானது)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தை) முதல் (முதல்) ஆக (பீஜமாக வைத்து) அலர்ந்து (விரிவடைந்து) இறீ (‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தோடு சேர்ந்து) ஈர் (இரண்டாக) ஆகும் (ஆகிவிடும்)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தின்) முதல் (முதலாகவே) ஆகியவற்கு (ஆகிவிட்ட சாதகர்கள்) உடையாள் (தன் வசத்தில் வைத்திருக்கும்) தன்னை (இறைவியானவளின் திருவருளையும்)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தின்) முதல் (முதல்) ஆகவே (ஆக வைத்தே) அளித்திடு (தகுதியானவர்களுக்கு கொடுங்கள்) நீயே (நீங்களே).

விளக்கம்:

‘ஐம்’ எனும் பீஜத்தை முதலாக வைத்து பரந்து விரிந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரமானது விரிவடையும் போது ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தோடு சேர்ந்து இரண்டாக ஆகிவிடும். ‘ஐம்’ எனும் பீஜமாகவே ஆகிவிட்ட சாதகர்கள் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் திருவருளையும் தகுதியானவர்களுக்கு கொடுக்கும் போது ‘ஐம்’ எனும் பீஜத்தை முதலாக வைத்தே நீங்களும் அளிப்பீர்களாக.

கருத்து: நவாக்கிரி சக்கரத்திற்கு இறைவியே முதலாக இருப்பதைப் போலவே அவளின் திருவருளை பெற்றுத் தரும் மந்திர பீஜங்களுக்கு ‘ஐம்’ எனும் பீஜமே முதலாக இருக்கின்றது.

பாடல் #1335

பாடல் #1335: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அளித்திடு நாவுக் கரசிவள் தன்னைப்
பழுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்
தொகுத்தொரு நாவிடைச் சொல்ல வல்லாளை
முகத்துளு முன்னெழக் கண்டு கொளீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அளிததிடு நாவுக கரசிவள தனனைப
பழுததிடும வெதமெய யாகம மெலலாந
தொகுததொரு நாவிடைச சொலல வலலாளை
முகததுளு முனனெழக கணடு கொளீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அளித்து இடு நாவுக்கு அரசி இவள் தன்னைப்
பழுத்து இடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவு இடைச் சொல்ல வல்லாளை
முகத்து உளும் முன் எழக் கண்டு கொளீரே.

பதப்பொருள்:

அளித்து (சாதகர்கள் அளித்துக்) இடு (கொடுக்கின்ற) நாவுக்கு (நாக்குக்கு) அரசி (அரசியாக இருக்கும்) இவள் (இறைவியானவளின்) தன்னைப் (உட் பொருளை அறிந்து)
பழுத்து (முக்தி பெறுவதற்கு) இடும் (வழி கொடுக்கும்) வேத (வேதங்களும்) மெய் (பேருண்மையான) ஆகமம் (ஆகமங்களும்) எல்லாம் (ஆகிய அனைத்தையும்)
தொகுத்து (ஒன்றாகத் தொகுத்து) ஒரு (தனது ஓரே) நாவு (நாக்கின்) இடைச் (நடுவில் வைத்து) சொல்ல (எடுத்துச் சொல்லும்) வல்லாளை (வல்லமை பொருந்திய இறைவியானவளை)
முகத்து (எந்த வடிவத்தில்) உளும் (நினைத்து வழிபடுகிறீர்களே) முன் (அந்த வடிவத்திலேயே உங்களின் முன்னால்) எழக் (எழுந்தருளுவதை) கண்டு (கண்களால் பார்த்துக்) கொளீரே (கொள்ளுங்கள்).

விளக்கம்:

பாடல் #1334 இல் உள்ளபடி இறைவியானவளின் திருவருளை தகுதியானவர்களுக்கு அளிக்கும் சாதகர்களின் நாக்குக்கு அரசியாக இருக்கும் இறைவியானவளை முழுவதும் அறிந்து கொண்டு முக்தி பெறுவதற்கு வழி கொடுக்கும் வேதங்கள், பேருண்மையான ஆகமங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து தனது ஓரே நாக்கின் நடுவில் வைத்து எடுத்துச் சொல்லும் வல்லமை பொருந்திய இறைவியானவளை எந்த வடிவத்தில் சாதகர்கள் நினைத்து வழிபடுகிறார்களோ அந்த வடிவத்திலேயே அவர்களின் முன்னால் எழுந்தருளுவதை தங்களின் கண்களால் அவர்கள் பார்த்து தரிசிப்பார்கள்.

பாடல் #1336

பாடல் #1336: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டவிச் சக்கர நாவிலெ ழுந்திடிற்
கொண்டவிம் மந்திரங் கூத்தன் குறியதா
மன்றினுள் வித்தையு மானிடர் கையதாம்
வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடவிச சககர நாவிலெ ழுநதிடிற
கொணடவிம மநதிரங கூததன குறியதா
மனறினுள விததையு மானிடர கையதாம
வெனறிடும வையக மெலலியல மெவியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்ட இச் சக்கரம் நாவில் எழுந்திடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றின் உள் வித்தையும் மானிடர் கை அதாம்
வென்றிடும் வையகம் மெல் இயல் மேவியே.

பதப்பொருள்:

கண்ட (சாதகர்கள் தரிசித்த இறைவியானவள் வீற்றிருக்கும்) இச் (இந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரம்) நாவில் (சாதகர்களின் நாக்குக்குள்ளும்) எழுந்திடில் (எழுந்து விட்டால்)
கொண்ட (சாதகர்கள் எடுத்துக் கொண்ட) இம் (இந்த) மந்திரம் (மந்திரங்களே) கூத்தன் (திருநடனம் புரிகின்ற இறைவனின்) குறி (திருவுருவத்தைக் குறிக்கின்ற) அதாம் (குறியாகவே இருக்கும்)
மன்றின் (குருகுலங்களில்) உள் (இருந்து கற்றுக் கொண்ட) வித்தையும் (வித்தைகளாக) மானிடர் (மானிடர்களின்) கை (கைகளில்) அதாம் (இருக்கின்ற அனைத்து விதமான வித்தைகளையும்)
வென்றிடும் (வென்று) வையகம் (உலகத்திலுள்ள அனைத்தையுமே) மெல் (மென்மையான) இயல் (இயல்பைக் கொண்ட இறைவியோடு) மேவியே (ஒன்றாகச் சேர்ந்திருந்து வெற்றி பெறலாம்).

விளக்கம்:

பாடல் #1335 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த இறைவியானவள் வீற்றிருக்கும் இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர்களின் நாக்குக்குள்ளும் எழுந்து விட்டால் சாதகர்கள் எடுத்துக் கொண்ட இந்த நவாக்கிரி சக்கரத்திலுள்ள மந்திரங்களே திருநடனம் புரிகின்ற இறைவனின் திருவுருவத்தைக் குறிக்கின்ற குறியாகவே இருக்கும். அதன் பிறகு உலகத்திலுள்ள மனிதர்களெல்லாம் தங்களின் குருகுலங்களில் இருந்து கற்றுக் கொண்டு கைகளில் வைத்திருக்கும் அனைத்து விதமான வித்தைகளையும் மென்மையான இயல்பைக் கொண்ட இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருந்தே சாதகர்கள் வெற்றி கொள்ள முடியும்.

கருத்து:

நவாக்கிரி சக்கரத்திலுள்ள மந்திங்களை சாதகர் கைவரப்பெற்றால் உலகத்திலுள்ள எந்த வித்தைகளையும் இறைவியின் துணைகொண்டு வெற்றி பெறலாம்.

பாடல் #1337

பாடல் #1337: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெல்லிய லாகிய மெய்ப்பொரு டாடன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லியல் பாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாக நடந்திடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலலிய லாகிய மெயபபொரு டாடனனைச
சொலலிய லாலெ தொடரநதங கிருநதிடும
பலலியல பாகப பரநதெழு நாளபல
நலலியல பாக நடநதிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெல் இயல் ஆகிய மெய் பொருள் ஆள் தன்னை
சொல் இயல் ஆலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல்பு ஆகப் பரந்து எழும் நாள் பல
நல் இயல்பு ஆக நடந்திடும் தானே.

பதப்பொருள்:

மெல் (மென்மையான) இயல் (தன்மையைக்) ஆகிய (கொண்டு) மெய் (உண்மைப்) பொருள் (பொருளின்) ஆள் (உருவமாகவே விளங்குகின்ற) தன்னை (இறைவியானவள்)
சொல் (சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும்) இயல் (தன்மைக்கு) ஆலே (ஏற்ற படியே) தொடர்ந்து (சாதகரைத் தொடர்ந்து) அங்கு (அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து) இருந்திடும் (வீற்றிருப்பாள்)
பல் (அதன் பிறகு நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல) இயல்பு (விதங்கள்) ஆகப் (ஆகவே) பரந்து (உலகம் முழுவதும் பரந்து விரிந்து) எழும் (சாதகருக்குள்ளிருந்து எழுந்து செல்லும் சக்தியானது) நாள் (கடந்து செல்கின்ற நாள்கள்) பல (பலவற்றையும் / பல காலங்களையும்)
நல் (நல் வினை கொண்ட) இயல்பு (தன்மை) ஆக (ஆகவே மாற்றி) நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி) தானே (அருளும்).

விளக்கம்:

பாடல் #1336 இல் உள்ளபடி மென்மையான தன்மையைக் கொண்டு உண்மைப் பொருளின் உருவமாகவே விளங்குகின்ற இறைவியானவள் சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும் தன்மைக்கு ஏற்ற படியே சாதகரைத் தொடர்ந்து அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து வீற்றிருப்பாள். அதன் பிறகு சாதகருக்குள்ளிருந்து எழுந்து உலகம் முழுவதும் பரந்து செல்லும் சக்தியானது நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல விதமாகக் கடந்து செல்கின்ற பல நாள்களையும் நல் வினை கொண்ட நாட்களாகவே மாற்றி அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி அருளும்.

பாடல் #1338

பாடல் #1338: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடு நாவினினு ண்மைக ளெல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடுஞ் சொற்பொரு டானுங்
கடந்திடுங் கல்விக் கரசிவ னாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடு நாவினினு ணமைக ளெலலாந
தொடரநதிடுஞ சொலலொடுஞ சொறபொரு டானுங
கடநதிடுங கலவிக கரசிவ னாகப
படரநதிடும பாரிற பகையிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் நாவினில் உண்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லோடும் சொற் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசு இவன் ஆகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.

பதப்பொருள்:

நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற) நாவினில் (சாதகரின் நாக்கில்) உண்மைகள் (உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள்) எல்லாம் (அனைத்தும் கிடைக்கப் பெறும்)
தொடர்ந்திடும் (அதன் பிறகு சாதகரைத் தொடர்ந்து வருகின்ற) சொல்லோடும் (அவர் சொல்லுகின்ற அனைத்து) சொற் (வார்த்தைகளும்) பொருள் (உடனே உண்மைப் பொருளாக) தானும் (மாறி உண்மையாகவே ஆகிவிடும்)
கடந்திடும் (அவரது நாக்கை கடந்து செல்கின்ற அனைத்து விதமான) கல்விக்கு (கல்விக்கும் / ஞானத்திற்கும்) அரசு (அரசனாகவே) இவன் (சாதகரும்) ஆகப் (ஆகி விடுவார்)
படர்ந்திடும் (அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த) பாரில் (உலகத்தில்) பகை (பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லாமல்) தானே (போய் விடும்).

விளக்கம்:

பாடல் #1337 இல் உள்ளபடி அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற சாதகரின் நாக்கில் உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும். அதன் பிறகு சாதகர் சொல்கின்ற அனைத்து வார்த்தைகளும் அவரது சொல்லைத் தொடர்ந்து உடனே உண்மையாகவே ஆகி செயல்படும். அதனால் அவரது நாக்கிலிருந்து வருகின்ற அனைத்து விதமான சொற்களாகிய ஞானத்திற்கும் அரசனாகவே சாதகரும் ஆகிவிடுவார். அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும் சாதகருக்கு இல்லாமல் போய் விடும்.

பாடல் #1339

பாடல் #1339: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பகையில்லைக் கௌமுத லைந்து மேலாகு
நகையில்லைச் சக்கர நன்றறி வார்க்குத்
தொகையில்லைச் சொல்லிய பல்லுயி ரெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பகையிலலைக கௌமுத லைநது மெலாகு
நகையிலலைச சககர நனறறி வாரககுத
தொகையிலலைச சொலலிய பலலுயி ரெலலாம
வகையிலலை யாக வணஙகிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பகை இல்லை கௌ முதல் ஐந்தும் மேல் ஆகும்
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
தொகை இல்லை சொல்லிய பல் உயிர் எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.

பதப்பொருள்:

பகை (இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லை) கௌ (நிலம்) முதல் (முதலாகிய) ஐந்தும் (ஐந்து பூதங்களால் ஆகிய அவரது உடலும்) மேல் (மேன்மை) ஆகும் (நிலை பெறும்)
நகை (இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (இல்லாமல் போய்விடும்) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) நன்று (தமக்குள் மிகவும் நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தொகை (ஒரு கூட்டமாகவும்) இல்லை (இல்லாமல்) சொல்லிய (சொல்லப்படுகின்ற) பல் (அனைத்து வகையான) உயிர் (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றையும்)
வகை (பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும்) இல்லை (இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகரை) ஆக (இறைவியாகவே) வணங்கிடும் (அனைத்து உயிர்களும் வணங்கி) தானே (அன்பு செலுத்தும்).

விளக்கம்:

பாடல் #1338 இல் உள்ளபடி இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும் இல்லாத சாதகரின் நிலம் முதலாகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலும் மேன்மை நிலை பெறும். இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் மிகவும் நன்றாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். உயிர்கள் என்று உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற அனைத்து வகையான உயிர்களையும் ஒரு கூட்டமாகவும் இல்லாமல் பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும் இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகர்களை அனைத்து உயிர்களும் இறைவியாகவே போற்றி வணங்கி அன்பு செலுத்தும்.