பாடல் #1487

பாடல் #1487: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

மார்கஞ்சன் மார்கிகட் கட்ட வகுப்பது
மார்கஞ்சன் மார்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்கஞ்சன் மார்க மெனுநெறிவை காதோர்
மார்கஞ்சன் மார்க மதிசித்த யோகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாரகஞசன மாரகிகட கடட வகுபபது
மாரகஞசன மாரகமெ யனறிமற றொனறிலலை
மாரகஞசன மாரக மெனுநெறிவை காதொர
மாரகஞசன மாரக மதிசிதத யொகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மார்கம் சன் மார்கிகள் கட்ட வகுப்பது
மார்கம் சன் மார்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்கம் சன் மார்கம் எனும் நெறிவை காத்தோர்
மார்கம் சன் மார்கம் அதி சித்த யோகமே.

பதப்பொருள்:

மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கிகள் (வழி முறையை கடைபிடிப்பவர்கள்) கட்ட (முறைப்படி கட்டமைத்து) வகுப்பது (வகுத்து வைத்த நெறி முறைகள்)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கமே (வழி முறையே) அன்றி (அல்லாமல்) மற்று (வேறு) ஒன்று (ஒன்றும்) இல்லை (இல்லை)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கம் (வழி முறை) எனும் (என்று சொல்லப்படும்) நெறிவை (நெறி முறையை வகுத்து வைத்த முறைப்படி) காத்தோர் (தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கம் (வழி முறையே) அதி (மிகவும் உயர்ந்த) சித்த (சித்தத்தை / எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து) யோகமே (செய்கின்ற யோகமாக உண்மை வழியே இருக்கின்றது).

விளக்கம்:

தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மை வழி முறையை கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்து வைத்த நெறி முறைகள் அல்லாமல் வேறு ஒரு வழி முறைகளும் இல்லை. உண்மை வழி முறை என்று சொல்லப்படும் அந்த நெறி முறைகளை வகுத்து வைத்த முறைப்படி தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக அந்த உண்மை வழியே இருக்கின்றது.