பாடல் #1483

பாடல் #1483: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்கச் சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்கச் சாதனம் பேதையர்க் காய்நிற்குந்
துன்மார்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்கந் தானவ னாகுஞ்சன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகச சாதனந தானஞான ஞெயமாம
பினமாரகச சாதனம பெதையரக காயநிறகுந
துனமாரகம விடட துரியத துரிசறறார
சனமாரகந தானவ னாகுஞசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்கம் விட்ட துரிய துரிசு அற்றார்
சன் மார்கம் தான் அவன் ஆகும் சன் மார்கமே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்க (வழிக்கு) சாதனம் (உதவுகின்ற கருவியாக) தான் (இருப்பது) ஞான (ஞானத்தின் மூலம்) ஞேயம் (அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளுவது) ஆம் (ஆகும்)
பின் (மற்ற) மார்க (வழிகளுக்கு) சாதனம் (கருவியாக இருக்கின்ற அனைத்தும்) பேதையர்க்கு (அறியாமையில் இருப்பவர்களுக்கு) ஆய் (பெற முடியாததாகவே) நிற்கும் (நிற்கின்றது)
துன் (தீய) மார்கம் (வழிகளை) விட்ட (நீக்கி விட்ட) துரிய (ஆழ்நிலை தியான நிலையில்) துரிசு (அழுக்குகள் எதுவும்) அற்றார் (இல்லாதவர்களாக பேரின்பத்தில் இருப்பதுவே)
சன் (உண்மையான) மார்கம் (வழிமுறையில்) தான் (தாமே) அவன் (சிவம்) ஆகும் (ஆகுகின்ற) சன் (சன் மார்க்க) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

உண்மையான வழிக்கு உதவுகின்ற கருவியாக இருப்பது ஞானத்தின் மூலம் அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளுவது ஆகும். மற்ற வழிகளுக்கு கருவியாக இருக்கின்ற அனைத்தும் அறியாமையில் இருப்பவர்களுக்கு பெற முடியாததாகவே நிற்கின்றது. தீய வழிகளை நீக்கி விட்ட ஆழ்நிலை தியான நிலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவர்களாக பேரின்பத்தில் இருப்பதுவே உண்மையான வழி முறையில் தாமே சிவம் ஆகுகின்ற சன் மார்க்க வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.