பாடல் #1484

பாடல் #1484: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்க மேத்த வரும்பெருஞ் சீடர்க்கும்
பின்மார்க மூன்றும் பிறவியற் பாமென்றால்
நன்மார்கந் தான்சிவ னோடுற நாடலே
சொன்மார்கஞ் சொல்லச் சுருதிகைக் கொள்ளுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரக மெதத வருமபெருஞ சீடரககும
பினமாரக மூனறும பிறவியற பாமெனறால
நனமாரகந தானசிவ னொடுற நாடலெ
சொனமாரகஞ சொலலச சுருதிகைக கொளளுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கம் ஏத்த வரும் பெரும் சீடர்க்கு
பின் மார்கம் மூன்றும் பிறவி இயல்பாம் என்றால்
நன் மார்கம் தான் சிவனோடு உற நாடலே
சொன் மார்கம் சொல்ல சுருதி கை கொள்ளுமே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்கம் (வழி முறையை) ஏத்த (அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி சிறப்பிக்க) வரும் (வருகின்ற) பெரும் (பெருமை பெற்ற) சீடர்க்கு (சீடர்களுக்கு)
பின் (அதற்கு பிறகு இருக்கின்ற) மார்கம் (வழி முறைகளாகிய) மூன்றும் (சக மார்கம், சற்புத்திர மார்கம், தாச மார்கம் ஆகிய மூன்றும்) பிறவி (பிறவியிலேயே) இயல்பாம் (இயல்பாக) என்றால் (கிடைத்து விடுகின்றது ஏன் என்றால்)
நன் (நன்மையான) மார்கம் (வழி முறையானது) தான் (அவர்கள்) சிவனோடு (சிவப் பரம்பொருளோடு) உற (சேர்ந்து இருப்பதை) நாடலே (விரும்பி தேடிக்கொண்டே இருப்பதால் ஆகும்)
சொன் (ஆகவே, குரு தமது சீடர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய) மார்கம் (வழி முறைகளாக) சொல்ல (சொல்லிய) சுருதி (வேதம் கொடுத்த அனைத்து முறைகளும்) கை (அவர்களுக்கு கைவரப்) கொள்ளுமே (பெறும்).

விளக்கம்:

உண்மையான வழி முறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி சிறப்பிக்க வருகின்ற பெருமை பெற்ற சீடர்களுக்கு அதற்கு பிறகு இருக்கின்ற வழி முறைகளாகிய சக மார்கம் சற்புத்திர மார்கம் தாச மார்கம் ஆகிய மூன்றும் பிறவியிலேயே இயல்பாக கிடைத்து விடுகின்றது. ஏன் என்றால் நன்மையான வழி முறையானது அவர்கள் சிவப் பரம்பொருளோடு சேர்ந்து இருப்பதை விரும்பி தேடிக்கொண்டே இருப்பதால் ஆகும். ஆகவே குரு தமது சீடர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய வழி முறைகளாக வேதங்கள் கொடுத்த அனைத்து முறைகளும் அவர்களுக்கு கைவரப் பெறும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.