பாடல் #1477

பாடல் #1477: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சாற்றுஞ் சன்மார்கமாந் தற்சிவ தத்துவந்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்ற மொழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாறறுஞ சனமாரகமாந தறசிவ தததுவந
தொறறங களான சுருதிச சுடரகணடு
சீறற மொழிநது சிவயொக சிததராயக
கூறறததை வெனறார குறிபபறிந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாற்றும் சன் மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவம்
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவ யோக சித்தர் ஆய்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே.

பதப்பொருள்:

சாற்றும் (எடுத்து சொல்லப் படுகின்ற) சன் (உண்மையான) மார்க்கம் (வழியாக) ஆம் (இருப்பது) தற் (தாமே) சிவ (சிவமாக இருக்கின்ற) தத்துவம் (தத்துவம் ஆகும்)
தோற்றங்கள் (பல விதமாக காணுகின்ற அனைத்து தோற்றங்களாக) ஆன (இருக்கின்ற) சுருதி (சத்தமும்) சுடர் (வெளிச்சமுமாக இருக்கின்ற) கண்டு (இறை தத்துவத்தை தமக்குள்ளே கண்டு உணர்ந்து)
சீற்றம் (அதன் பயனால் காமம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் ஆகிய அனைத்தும்) ஒழிந்து (அழிந்து போய்) சிவ (சிவ) யோக (யோகத்தையே) சித்தர் (சித்தமாக கொண்டு இருப்பவர்களாக) ஆய் (ஆகி)
கூற்றத்தை (இறப்பு என்கின்ற ஒன்றை) வென்றார் (வென்று விட்டவர்களே) குறிப்பு (இந்த சன் மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை) அறிந்தார்களே (அறிந்தவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

எடுத்து சொல்லப் படுகின்ற உண்மையான வழியாக இருப்பது தாமே சிவமாக இருக்கின்ற தத்துவம் ஆகும். பல விதமாக காணுகின்ற அனைத்து தோற்றங்களாக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமுமாக இருக்கின்ற இறை தத்துவத்தை தமக்குள்ளே கண்டு உணர்ந்து அதன் பயனால் காமம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் ஆகிய அனைத்தும் அழிந்து போய் சிவ யோகத்தையே சித்தமாக கொண்டு இருப்பவர்களாகி இறப்பு என்கின்ற ஒன்றை வென்று விட்டவர்களே இந்த சன் மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.