பாடல் #1587

பாடல் #1587: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவு முத்தி
சிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமான ஞானந தெளியவொண சிததி
சிவமான ஞானந தெளியவு முததி
சிவமான ஞானஞ சிவபர தெகுஞ
சிவமான ஞானஞ சிவானநத நலகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளியவும் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவ பரத்து ஏகும்
சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே.

பதப்பொருள்:

சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளிய (அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று) ஒண் (அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது) சித்தி (அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளியவும் (அவரது மனம் தெளியும் போதே) முத்தி (அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) சிவ (சிவத்தின்) பரத்து (பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில்) ஏகும் (தாமும் சென்று அடைகின்ற நிலையை அடியவர் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானமே) சிவ (சிவத்தின்) ஆனந்தம் (பேரானந்த நிலையையும்) நல்குமே (அடியவருக்கு கொடுக்கும்).

விளக்கம்:

சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார். அப்படி அவரது மனம் தெளியும் போதே அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார். அப்போது சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்று விடுவார். அதன் பிறகு சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்கு கொடுக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.