பாடல் #1588

பாடல் #1588: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதுணரந தெனிவ வகலிட முறறுஞ
செறிநதுணரந தொதித திருவருள பெறறென
மறநதொழிந தெனமதி மானிடர வாழககை
பிறிநதொழிந தெனிப பிறவியை நானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதி திரு அருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மானிடர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.

பதப்பொருள்:

அறிந்து (முழுமையாக அறிந்து) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) இவ் (இந்த) அகல் (பரந்து விரிந்து இருக்கின்ற) இடம் (உலகம்) முற்றும் (முழுவதும் உள்ள பொருள்களை)
செறிந்து (அந்த அனைத்திற்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை) உணர்ந்து (உணர்ந்து கொண்டு) ஓதி (அந்த இறைவனை ஓதி) திரு (திரு) அருள் (அருளையும்) பெற்றேன் (பெற்றுக் கொண்டேன்)
மறந்து (மறந்து) ஒழிந்தேன் (ஒழித்து விட்டேன்) மதி (தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற) மானிடர் (பிற மனிதர்களின்) வாழ்க்கை (வாழ்க்கையை)
பிறிந்து (அவர்களை விட்டு பிரிந்து) ஒழிந்தேன் (உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டேன்) இப் (இந்த) பிறவியை (பிறவியையும்) நானே (யானே).

விளக்கம்:

இந்த பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன். அந்த அனைத்து பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை உணர்ந்து கொண்டு அந்த இறைவனை ஓதி திரு அருளையும் பெற்றுக் கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்து விட்டேன். அவர்களை விட்டு பிரிந்து உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டு இந்த பிறவியையும் நீங்கி விட்டேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.