பாடல் #1586

பாடல் #1586: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பினனெயத வைதததொ ரினபப பிறபபினை
முனனெயத வைதத முதலவனெ யெமமிறை
தனனெயதுங காலததுத தானெ வெளிபபடு
மனனெயத வைதத மனமது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனே எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

பதப்பொருள்:

பின் (அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில்) எய்த (அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி) வைத்தது (வைத்து அருளிய) ஓர் (ஒரு இறை சக்தியானது) இன்ப (இன்பத்தை அனுபவிக்கின்ற) பிறப்பினை (பிறவியை இந்த பிறவியிலேயே கொடுத்து அருளுவதும்)
முன் (இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே) எய்த (இந்தப் பிறவியில் அந்த நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளியதும்) முதல்வனே (அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற) எம் (எமது) இறை (இறைவனே ஆகும்)
தன் (அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும்) எய்தும் (அடையும்) காலத்து (காலத்தில்) தானே (இறைவன் தாமே) வெளிப்படும் (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு)
மன் (என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு) எய்த (இருக்கின்ற நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளிய) மனம் (மனமாகவும்) அது (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த இறை சக்தியே) தானே (இருக்கின்றது).

விளக்கம்:

அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி கொடுத்து அருளுவதும் இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும் படி வைத்து அருளியதும் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில் இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு இருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும் படி செய்து அருளுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.