பாடல் #1583

பாடல் #1583: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்றும் கீழுமொரு வர்க்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானநதி நீரமையுட சநதிதத சீரவைதத
கொனநதி யெநதை குறிபபறி வாரிலலை
வானநதி யெனறும கிழுமொரு வரககுத
தானநதி யஙகித தனிசசுட ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் நந்தி நீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்றும் கீழும் ஒருவர்க்கு
தான் நந்தி அங்கி தனி சுடர் ஆமே.

பதப்பொருள்:

தான் (அடியவர் தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) நீர்மை (மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு) உள் (தமக்குள்) சந்தித்த (சந்தித்த இறைவன் தனது அருளால்) சீர் (சிறப்பாக) வைத்த (வைத்து அருளிய ஞானத்தின் மூலம்)
கோன் (வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும்) நந்தி (குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய) எந்தை (எமது தந்தையே) குறிப்பு (எனும் உண்மையை) அறிவார் (அறிந்து கொள்ளுகின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
வான் (அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல) நந்தி (குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே) என்றும் (என்றும்) கீழும் (இந்த உலகத்திலும்) ஒருவர்க்கு (இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி)
தான் (தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று) அங்கி (அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும்) தனி (தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும்) சுடர் (சுடர் ஒளியாகவும்) ஆமே (இருக்கின்றார்).

விளக்கம்:

அடியவர் தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக வைத்து அருளிய ஞானத்தின் மூலம் வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய எமது தந்தையே எனும் உண்மையை அறிந்து கொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும் தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.

கருத்து:

குருவாக இருக்கின்ற இறைவன் மழை போல தனது அருளை வழங்கினாலும் இந்த உலகத்தில் இறைவனின் அருளை உணர்ந்த ஞானிகளின் பக்குவத்துக்கு ஏற்றபடி யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே அனைவருக்கும் நன்மை செய்யும் தனிப் பெரும் சுடரொளியாக திகழ்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.