பாடல் #1468

பாடல் #1468: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

சத்தமுஞ் சத்த மன்னுந் தகுமனது
முய்த்த வுணர்வு முணர்ந்துங் கரந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததமுஞ சதத மனனுந தகுமனது
முயதத வுணரவு முணரநதுங கரநதையுஞ
சிததமென றிமமூனறுஞ சிநதிககுஞ செயகையுஞ
சததங கடநதவர பெறறசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தமும் சத்த மன்னும் தகு மனதும்
உய்த்த உணர்வும் உணர்ந்தும் கரந்தையும்
சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன் மார்கமே.

பதப்பொருள்:

சத்தமும் (ஞானத்தை பெறுகின்ற மூல சத்தமும்) சத்த (அந்த சத்தம்) மன்னும் (நிலை பெற்று இருப்பதற்கு) தகு (தகுதியான) மனதும் (மனமும்)
உய்த்த (அந்த மனதால் கிடைக்கப் பெற்ற) உணர்வும் (உண்மை உணர்வும்) உணர்ந்தும் (அதை உணர்ந்து கொண்டதால்) கரந்தையும் (அதற்கு காரணமாக இருப்பவர் என்று தெரிந்து கொண்ட குருவும்)
சித்தம் (சித்தம்) என்று (என்று அழைக்கப் படுகின்ற) இம் (இந்த) மூன்றும் (மூன்றையும்) சிந்திக்கும் (எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற) செய்கையும் (செயலும் ஆகிய இவை அனைத்தும்)
சத்தம் (சத்தங்களை) கடந்தவர் (கடந்து அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனை அறிந்து கொண்ட ஞானியர்கள்) பெற்ற (பெற்ற) சன் (உண்மை) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

ஞானத்தை பெறுகின்ற 1. மூல சத்தமும், அந்த சத்தம் நிலை பெற்று இருப்பதற்கு தகுதியான மனமும், அந்த மனதால் கிடைக்கப் பெற்ற 2. உண்மை உணர்வும், அதை உணர்ந்து கொண்டதால் அதற்கு காரணமாக இருப்பவர் என்று தெரிந்து கொண்ட 3. குருவும், சித்தம் என்று அழைக்கப் படுகின்ற இந்த மூன்றையும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற செயலும், ஆகிய இவை அனைத்தும் சத்தங்களை கடந்து அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனை அறிந்து கொண்ட ஞானியர்கள் பெற்ற உண்மை வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.