பாடல் #1474

பாடல் #1474: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்தம் நல்லொளி
ஞானக் கிரிகையே நன்முத்தி நாடலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததின ஞானாதி நானகுமாம ஞானிககு
ஞானததின ஞானமெ நானென தெனனாமல
ஞானததில யொகமெ நாதாநதம நலலொளி
ஞானக கிரிகையெ நனமுததி நாடலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஞான ஆதி நான்கும் ஆம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாத அந்தம் நல் ஒளி
ஞான கிரிகையே நன் முத்தி நாடலே.

பதப்பொருள்:

ஞானத்தின் (ஞானத்தில் முழுமை பெற்ற) ஞான (ஞானத்திற்கு) ஆதி (முதலாக இருக்கின்ற) நான்கும் (நான்கு விதமான நிலைகள்) ஆம் (ஆக) ஞானிக்கு (ஞானிக்கு இருப்பதில்)
ஞானத்தின் (ஞானத்தில்) ஞானமே (முழுமை பெற்ற ஞானமானது) நான் (நான்) எனது (இது எனது) என்னாமல் (என்கின்ற எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் அனைத்தும் இறைவனே என்று இருக்கின்ற நிலையாகும்)
ஞானத்தில் (ஞானமானது) யோகமே (முழுமை பெற்ற யோகத்தில்) நாத (சத்தத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) நல் (நன்மையே வடிவான) ஒளி (ஜோதியாகும்)
ஞான (ஞானமானது) கிரிகையே (முழுமை பெற்ற கிரியையில்) நன் (நன்மை தரும்) முத்தி (முக்தியை தேடிச் செல்லுவதல் ஆகும்) நாடலே (சரியையில் முழுமை பெற்ற ஞானமானது இறைவனை நாடிச் சென்று அடைவது ஆகும்).

விளக்கம்:

பாடல் #1473 இல் உள்ளபடி ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற நான்கு விதமான நிலைகளாக ஞானிக்கு இருப்பதில் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமானது நான் இது எனது என்கின்ற எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் அனைத்தும் இறைவனே என்று இருக்கின்ற நிலையாகும். யோகத்தில் முழுமை பெற்ற ஞானமானது சத்தத்திற்கு எல்லையாக இருக்கின்ற நன்மையே வடிவான ஜோதியாகும். கிரிகையில் முழுமை பெற்ற ஞானமானது நன்மை தரும் முக்தியை தேடிச் செல்லுதல் ஆகும். சரியையில் முழுமை பெற்ற ஞானமானது இறைவனை நாடிச் சென்று அடைவது ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.