பாடல் #1473

பாடல் #1473: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்து விளைந்திடுந்
தானிக் குலத்தோர் சரிதை கிரிகையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிக குடனகுணம ஞானததில நானகுமா
மொனிக கிவையொனறுங கூடாமுன மொகிதது
மெனிறற லாஞசததி விதது விளைநதிடுந
தானிக குலததொர சரிதை கிரிகையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்கும் ஆம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்து விளைந்திடும்
தான் இக் குலத்தோர் சரிதை கிரிகையே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானத்தை பெற்ற ஞானிக்கு) உடன் (அவருடனே இருக்கின்ற) குணம் (குணங்களாக) ஞானத்தில் (ஞானத்தில் சேர்ந்து இருக்கின்ற) நான்கும் (நான்கு விதமாக கிரியையில் முழுமை பெற்ற ஞானமும், சரியையில் முழுமை பெற்ற ஞானமும், யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும், ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும்) ஆம் (ஆகிய நிலைகள் இருக்கின்றன)
மோனிக்கு (இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு) இவை (இந்த நான்கு நிலைகளில்) ஒன்றும் (ஒன்று கூட) கூடா (குணமாக சேர்ந்து இருப்பதற்கு) முன் (முந்தைய காலத்தில்) மோகித்து (அவர் உலகப் பற்றுக்களில் மயங்கி இருக்கும் போது)
மேல் (அவருக்கு மேல்) நிற்றல் (நின்று) ஆம் (அருளுகின்றதாகிய) சத்தி (இறை சக்தியானது) வித்து (அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல) விளைந்திடும் (ஞானம் விளைந்து விடும்)
தான் (அதன் பயனால் மௌன நிலை என்ற உச்சத்திற்கு சென்று நான்கு விதமான ஞான நிலைகளையும் தம்முடைய குணங்களாக கொண்ட) இக் (இந்த) குலத்தோர் (ஞானியர்கள் அனைவரும்) சரிதை (இனி இறைவனை அடைய வேண்டும் என்று சரியையும்) கிரிகையே (கிரியையும் செய்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களை கொடுக்கின்ற இறை நிலையாக இருப்பார்கள்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தை பெற்ற ஞானிக்கு அவருடனே இருக்கின்ற குணங்களாக ஞானத்தில் சேர்ந்து இருக்கின்ற சரியையில் முழுமை பெற்ற ஞானமும் கிரியையில் முழுமை பெற்ற ஞானமும் யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஆகிய நான்கு விதமான நிலைகள் இருக்கின்றன. இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு இந்த நான்கு நிலைகளில் ஒன்று கூட குணமாக சேர்ந்து இருப்பதற்கு முந்தைய காலத்தில் அவர் உலகப் பற்றுக்களில் மயங்கி இருக்கும் போது அவருக்கு மேல் நின்று அருளுகின்றதாகிய இறை சக்தியானது பாடல் #1471 இல் உள்ளபடி அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல ஞானம் விளைந்து விடும். அதன் பயனால் மௌன நிலை என்ற உச்சத்திற்கு சென்று நான்கு விதமான ஞான நிலைகளையும் தம்முடைய குணங்களாக கொண்ட இந்த ஞானியர்கள் அனைவரும் இனி இறைவனை அடைய வேண்டும் என்று சரியையும் கிரியையும் செய்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களை கொடுக்கின்ற இறை நிலையாக இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.