பாடல் #1475

பாடல் #1475: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோர்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோர்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணணிய ஞானததின ஞானாதி நணணுவொன
புணணிய பாவங கடநத பிணககறறொர
கணணிய நெயங கரைஞானங கணடுளொர
திணணிய சுததன சிவமுததன சிததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோர்
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டு உளோர்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.

பதப்பொருள்:

நண்ணிய (தமக்கு கிடைக்கப் பெற்ற) ஞானத்தின் (ஞானத்தில்) ஞான (முழுமை பெற்ற ஞானத்திற்கு) ஆதி (முதலாக இருக்கின்ற ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகிய நான்கு நிலைகளையும்) நண்ணுவோன் (கிடைக்கப் பெற்றவர்கள்)
புண்ணிய (புண்ணியம்) பாவம் (பாவம் என்கின்ற) கடந்த (நிலைகளை கடந்து நின்று) பிணக்கு (எந்த விதமான பற்றுகளும்) அற்றோர் (இல்லாமல் இருப்பவர்கள்)
கண்ணிய (மேன்மையான) நேயம் (அன்பிற்கு) கரை (எல்லையாக இருக்கின்ற) ஞானம் (இறை ஞானத்தை) கண்டு (கண்டு) உளோர் (அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள்)
திண்ணிய (உறுதியாக) சுத்தன் (எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கின்ற) சிவ (சிவ நிலையில்) முத்தன் (முக்தியாக இருக்கின்ற) சித்தனே (சித்தர்கள் ஆகும்).

விளக்கம்:

தமக்கு கிடைக்கப் பெற்ற ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை ஞானத்தில் யோகம் ஞானத்தில் ஞானம் ஆகிய நான்கு நிலைகளையும் கிடைக்கப் பெற்றவர்கள் புண்ணியம் பாவம் என்கின்ற நிலைகளை கடந்து நின்று எந்த விதமான பற்றுகளும் இல்லாமல் இருப்பவர்கள். மேன்மையான அன்பிற்கு எல்லையாக இருக்கின்ற இறை ஞானத்தை கண்டு அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள். இவர்களே உறுதியாக எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கின்ற சிவ நிலையில் முக்தியாக இருக்கின்ற சித்தர்கள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.