பாடல் #1472

பாடல் #1472: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையு
ளேனம் விளைந்தெதி ரேகான் வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தினில் நீர்தண்டு
மூனம றுத்துநின் றொண்சுட ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானம விளைநதெழு கினறதொர சிநதையு
ளெனம விளைநதெதி ரெகான வழிதொறுங
கூனல மதிமண டலததினில நீரதணடு
மூனம றுததுநின றொணசுட ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தை உள்
ஏனம் விளைந்து எதிரே கான் வழி தோறும்
கூனல் மதி மண்டலத்தினில் நீர் தண்டும்
ஊனம் அறுத்து நின்ற ஒண் சுடர் ஆமே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மையான ஞானம்) விளைந்து (உருவாகி) எழுகின்றது (மேல் நிலைக்கு எழுந்து இருக்கின்ற) ஓர் (ஒரு ஞானியின்) சிந்தை (சிந்தைனைக்கு) உள் (உள்ளே)
ஏனம் (இன்னமும் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆணவம் முதலிய குற்றங்கள்) விளைந்து (பிறவியின் காரணத்தினால் விளைந்து) எதிரே (அவர் எதிர்கொள்கின்ற வாழ்க்கையை) கான் (காட்டு) வழி (வழி போல) தோறும் (முழுவதும் கடினமாக வைத்து இருக்கும்)
கூனல் (அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால் அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி) மதி (அறிவு ஞானமாக இருக்கின்ற) மண்டலத்தினில் (மண்டலத்தில்) நீர் (அமிழ்த நீரை வைத்து இருக்கும்) தண்டும் (சுழுமுனை நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச் செய்து)
ஊனம் (இறைவனை அவர் அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து மலங்களையும்) அறுத்து (அதன் மூலம் நீக்கி விட்டு) நின்ற (நிலைபெற்று நின்று) ஒண் (எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கின்ற) சுடர் (இறைவனின் ஜோதி வடிவமாகவே) ஆமே (அவரையும் ஆக்கி விடும்).

விளக்கம்:

பாடல் #1471 இல் உள்ளபடி இறைவனை அடைவதற்கு தேவையான வழிமுறையை அறிந்து கொண்டு அதை விடாமல் கடை பிடித்ததால் உண்மையான ஞானம் உருவாகி மேல் நிலைக்கு எழுந்து இருக்கின்ற ஒரு ஞானியின் சிந்தைனைக்கு உள்ளே இன்னமும் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆணவம் கன்மம் முதலிய குற்றங்கள் பிறவியின் காரணத்தினால் விளைந்து அவர் எதிர்கொள்கின்ற வாழ்க்கையை காட்டு வழி போல முழுவதும் கடினமாக வைத்து இருக்கும். அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால் அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி அறிவு ஞானமாக இருக்கின்ற மண்டலத்தில் அமிழ்த நீரை வைத்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச் செய்து இறைவனை அவர் அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து மலங்களையும் அதன் மூலம் நீக்கி விட்டு நிலைபெற்று நின்று எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி வடிவமாகவே அவரையும் ஆக்கி விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.