பாடல் #1469

பாடல் #1469: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

தன்பா லுலகுந் தனக்கரு ளாவது
மன்பா லெனக் கருளாவது மாவனென்
பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமு
மன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனபா லுலகுந தனககரு ளாவது
மனபா லெனக கருளாவது மாவனென
பாரகள ஞானமு மெயதுஞ சிவயோகமு
மினபாலி னெயமும பெறறிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் பால் உலகும் தனக்கு அருள் ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன்
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவ யோகமும்
இன் பாலின் நேயமும் பெற்றிடும் தானே.

பதப்பொருள்:

தன் (தாம்) பால் (சார்ந்து இருக்கின்ற) உலகும் (உலகமும் அதில் நிகழ்கின்ற அனைத்தும்) தனக்கு (தமக்கு) அருள் (இறைவன் கொடுத்த அருள்) ஆவதும் (என்று எடுத்துக் கொள்வதும்)
அன்பால் (தம் மேல் கொண்ட அன்பினால்) எனக்கு (தமக்கு) அருள் (கொடுக்கின்ற அருள்) ஆவதும் (ஆகவே அனைத்தும் நிகழ்வதும்) ஆவன் (அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கின்றான்)
என்பார்கள் (என்று கூறுவார்கள்) ஞானமும் (இறையருளால் ஞானமும்) எய்தும் (பெற்று) சிவ (சிவத்தை அறியும்) யோகமும் (யோகமும் பெற்றவர்கள்)
இன் (இனிமையான) பாலின் (பாலைப் போல) நேயமும் (இறைவனோடு கொண்ட தூய்மையான அன்பினால்) பெற்றிடும் (தாம் பெற்ற பேரின்பத்தையும்) தானே (அனுபவித்தவர்களாகிய ஞானிகள்).

விளக்கம்:

தாம் சார்ந்து இருக்கின்ற உலகமும் அதில் நிகழ்கின்ற அனைத்தும் தமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று எடுத்துக் கொள்வதும் தம் மேல் கொண்ட அன்பினால் தமக்கு இறைவன் கொடுக்கின்ற அருளாகவே அனைத்தும் நிகழ்வதும் அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கின்றான் என்று ஞானிகள் கூறுவார்கள். இந்த ஞானிகளே இறையருளால் ஞானமும் பெற்று சிவத்தை அறியும் யோகமும் பெற்று இனிமையான பாலைப் போல இறைவனோடு அவர்கள் கொண்ட தூய்மையான அன்பினால் பேரின்பத்தையும் பெற்று இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.