பாடல் #1149: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
புனையவல் லாள்புவ னத்திர யங்கள்
வனையவல் லாளண்ட கோடிக ளுள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.
விளக்கம்:
பாடல் #1148 இல் உள்ளபடி மூன்று ஜோதிகளையும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் மேலுலகம் பூலோகம் கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்குள்ளும் கலந்து நின்று கோடிக்கணக்கான அண்ட சராசரங்களையும் அதற்குள் பல உயிர்களையும் உருவாக்கும் வல்லமை பெற்றவள். உயிர்களையும் படைத்து அந்த உயிர்களுக்கு அண்டத்தில் இருக்கும் இறைவனது பேரொளியை காட்டி அருளி உயிர்களுக்கு அந்த ஜோதியை அடையும் வழியையும் அருளுகின்றாள். இவை அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்ற இறைவியையே யானும் போற்றி வணங்குகின்றேன்.
