பாடல் #1426

பாடல் #1426: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையு முழுவெண்ணெண் சித்தியு
மேனை நிலமு மெழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானி புவியெழு நனனூ லனைததுடன
மொன திசையு முழுவெணணெண சிததியு
மெனை நிலமு மெழுதா மறையீறுங
கொனொடு தனனையுங காணுங குணததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானி புவி எழு நன் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண் எண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோன் ஓடு தன்னையும் காணும் குணத்தனே.

பதப்பொருள்:

ஞானி (ஞானியாகிய சாதகர்) புவி (உலகத்திலுள்ள உயிர்கள்) எழு (எழுச்சி பெற) நன் (நன்மையை தருகின்ற) நூல் (நூல்கள்) அனைத்துடன் (அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும்)
மோன (பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும்) திசையும் (அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும்) முழு (தமது முழு) எண் (எண்ணத்திலும் இறைவனை வைத்து) எண் (எட்டு விதமான) சித்தியும் (சித்திகளையும் பெற்றவராகவும்)
ஏனை (இந்த உலகம் தாண்டி இருக்கின்ற) நிலமும் (அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும்) எழுதா (அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக) மறை (மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும்) ஈறும் (அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும்)
கோன் (அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற) ஓடு (இறைவனோடு) தன்னையும் (தன்னையும்) காணும் (சரிசமமாக பாவிக்கும்) குணத்தனே (குணத்தை கொண்டவராகவும் இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1425 இல் உள்ளபடி சக்தி மயங்களாகிய இறையை இந்த உலகிலேயே உணர்ந்து கொண்ட ஞானியாகிய சாதகர் உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையை தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும் பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும் தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும் இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும் அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும் அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாக பாவிக்கும் குணத்தை கொண்டவராகவும் இருப்பார்.

பாடல் #1419

பாடல் #1419: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
மேருவு மூவுல காளியிலங் கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊரு முலகமு மொககப பணைககினற
பெரறி வாழன பெருமை குறிததிடில
மெருவு மூவுல காழியிலங கெழுந
தாரணி நாலவகைச சைவமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊரும் உலகமும் ஒக்க பணைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடில்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே.

பதப்பொருள்:

ஊரும் (அனைத்து உயிர்களையும்) உலகமும் (அவை இருக்கின்ற உலகத்தையும்) ஒக்க (ஒன்றாக) பணைக்கின்ற (கலந்து நின்று இயக்குகின்ற)
பேர் (பேரறிவு) அறிவாளன் (ஞானமாக இருக்கின்ற இறைவனின்) பெருமை (பெருமைகளை) குறித்திடில் (குறித்து சொல்லப் போனால்)
மேருவும் (அனைத்து சக்திகளின் ஒன்றியமாகிய மேரு மலையயும்) மூ (மேலோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய முன்று) உலகு (உலகங்களையும்) ஆளி (ஆளுகின்ற இறைவனை) இலங்கு (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) எழும் (அவனிடமிருந்தே வெளிவந்து)
தாரணி (அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற) நால் (நான்கு) வகை (வகையான நெறிமுறைகளே) சைவமும் (சைவம்) ஆமே (என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்).

விளக்கம்:

அனைத்து உயிர்களையும் அவை இருக்கின்ற உலகத்தையும் ஒன்றாக கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவு ஞானமாக இருக்கின்ற இறைவனின் பெருமைகளை குறித்து சொல்லப் போனால் அனைத்து சக்திகளின் மொத்த உருவமாகிய மேரு மலையயும் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய முன்று உலகங்களையும் ஆளுகின்ற இறைவனை தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி அவனிடமிருந்தே வெளிவந்து அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்.

குறிப்பு: இறைவனை உணர்ந்து அடைவதற்கு அவனால் அருளப்பட்ட நான்கு விதமான நெறிமுறைகளே சைவம் ஆகும். அந்த சைவ நெறிமுறைகளை அறிந்து கொண்டவர்கள் சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1420

பாடல் #1420: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்
சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்
சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்று
நித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுஞ சதசததுந தானகணடுஞ
சிதது மசிததையுஞ செரவுறாமெ நீததுஞ
சுதத மசுததமுந தொயவுறாமெ நினறு
நிததம பரசுதத சைவரககு நெயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டும்
சித்தும் அசித்தையும் சேர்வு உறாமே நீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வு உறாமே நின்று
நித்தம் பர சுத்த சைவர்க்கு நேயமே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) தான் (ஆகிய இவை மூன்றையும்) கண்டும் (கண்டு உணர்ந்தும்)
சித்தும் (உலக அறிவும்) அசித்தையும் (அறியாமையும்) சேர்வு (சேர்ந்து) உறாமே (கலந்து விடாமல்) நீத்தும் (அதிலிருந்து விலகி இருந்தும்)
சுத்தம் (சுத்த மாயை) அசுத்தமும் (அசுத்த மாயை) தோய்வு (ஆகிய இரண்டிலும் மயங்கி) உறாமே (இல்லாமல்) நின்று (உண்மை ஞானத்தில் நின்றும்)
நித்தம் (எப்பொழுதும்) பர (பரம்பொருளாகிய இறைவனின்) சுத்த (அதி சுத்த நிலையில் இருப்பதே) சைவர்க்கு (சைவர்களின்) நேயமே (பேரன்பு ஆகும்).

விளக்கம்:

நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இவை மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் சேர்ந்து விடாமல் அதிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்தில் நின்றும், எப்பொழுதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி சடங்குகளில் சிக்கிக் கொள்ளாமல் சம்பிரதாயங்களைக் கடந்து இறைவனிடம் அன்பு செலுத்துபவர்களே சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1421

பாடல் #1421: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கறபன கறறுக கலைமனனு மெயயொக
முறபத ஞான முறைமுறை நணணியெ
சொறபத மெவித துரிசறறு மெலான
தறபரங கணடுளொர சைவசித தாந்தரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கற்பன கற்று கலை மன்னும் மெய் யோகம்
முற் பதம் ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவி துரிசு அற்று மேலான
தற் பரம் கண்டு உளோர் சைவ சித்தாந்தரே.

பதப்பொருள்:

கற்பன (இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள்) கற்று (அனைத்தையும் கற்றுக் கொண்டு) கலை (அதன் மூலம் பெற்ற கலை அறிவின்) மன்னும் (மிகவும் உன்னதமான உச்ச நிலையில்) மெய் (உண்மையான) யோகம் (யோகத்தை அறிந்து கொண்டு)
முற் (அந்த அறிவிற்கு முதல் மூல) பதம் (தன்மையாக இருக்கின்ற) ஞான (ஞானத்தை) முறை (அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு) முறை (அந்த முறைகளை முறைப்படி) நண்ணியே (கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு)
சொற் (தாம் சொல்லுகின்ற வாக்கில்) பதம் (சத்தியத்தின் தன்மையை) மேவி (கடைபிடித்து) துரிசு (தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும்) அற்று (நீங்கப் பெற்று) மேலான (அனைத்திற்கும் மேலாக)
தற் (தானாகவே இருக்கின்ற) பரம் (பரம்பொருளை) கண்டு (தரிசித்து) உளோர் (அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே) சைவ (சைவத்தின்) சித்தாந்தரே (சித்தாந்தத்தை கடைபிடிக்கின்ற சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்து கொண்டு அந்த அறிவிற்கு முதல் மூல தன்மையாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு அந்த முறைகளை முறைப்படி கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையை கடைபிடித்து தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப் பெற்று அனைத்திற்கும் மேலாக தானாகவே இருக்கின்ற பரம்பொருளை தரிசித்து அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளின் மூலம் இறைவனை அடைந்தவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

பாடல் #1422

பாடல் #1422: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதாந்த பூரண ஞானநே யத்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதாநதஞ சுததம விளஙகிய சிததாநதம
நாதாநதங கணடொர நடுககறற காடசியொர
பூதாநத பொதாநத மாகப புனஞசெயய
நாதாநத பூரண ஞானநெ யததரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேத அந்தம் சுத்தம் விளங்கிய சித்த அந்தம்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியோர்
பூத அந்தம் போத அந்தம் ஆக புனம் செய்ய
நாத அந்தம் பூரணம் ஞான நேயத்தரே.

பதப்பொருள்:

வேத (வேதங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) சுத்தம் (மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில்) விளங்கிய (விளங்குகின்ற) சித்த (எண்ணங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) கண்டோர் (கண்டு தரிசித்தவர்கள்) நடுக்கு (அசைகின்ற எண்ணங்கள்) அற்ற (இல்லாமல்) காட்சியோர் (எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள்)
பூத (ஐந்து பூதங்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) போத (கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) ஆக (இறைவனாகவே ஆகுகின்ற) புனம் (பக்குவத்தை) செய்ய (பெறுவதற்கான செயல்களை செய்து)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற இறைவனை) பூரணம் (பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே) ஞான (பேரறிவு ஞானமாகவும்) நேயத்தரே (பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும் மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை கண்டு தரிசித்தவர்கள் அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும் கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தை பெறுவதற்கான செயல்களை செய்து நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனை பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்.

குறிப்பு: இறைவனை அடைந்து அவனது பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்களே ஞான நேயத்தர்கள் ஆவார்கள்.

பாடல் #1319

பாடல் #1319: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்
நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாக
நவாக்கிரி யெண்பத் தொருவகை யாக
நவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி சககரம நானுரை செயயில
நவாககிரி யொன்று நவாககிரி யாக
நவாககிரி யெணபத தொருவகை யாக
நவாககிரி யாகககிலீஞ சௌம முதலீறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி சக்கரம் நான் உரை செய்யில்
நவ அக்கிரி ஒன்று நவ அக்கிரி ஆக
நவ அக்கிரி எண்பத்து ஒரு வகை ஆக
நவ அக்கிரி ஆக கிலீம் சௌம் முதல் ஈறே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) நான் (யான்) உரை (எடுத்துக் கூற) செய்யில் (ஆரம்பித்தால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஒன்று (ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாகிய அட்சரமே) நவ (ஒன்பது) அக்கிரி (அட்சரங்கள்) ஆக (ஆக இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) எண்பத்து (ஒன்பதும் ஒன்பதும் பெருக்கினால் வரும் மொத்தம் எண்பதும்) ஒரு (ஒன்றும் சேர்ந்து மொத்தம் எண்பத்தோரு) வகை (வகையான அட்சரங்களாக) ஆக (விரிவடைந்து இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆக (சக்கரமாக வடிவமைப்பு) கிலீம் (க்லீம் அட்சரமும்) சௌம் (ஸெளம் அட்சரமும்) முதல் (முதலும்) ஈறே (கடைசியுமாக உள்ளது).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்ற சக்கரமாகும். இந்த சக்கரத்தில் இருக்கின்ற ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால் மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்து இருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும் போது ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் முடிவதாக இருக்கின்றது. அதனை தலை கீழாகப் பார்க்கும் போது ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் முடிவதாகவும் இருக்கின்றது.

குறிப்பு: அக்கிரி என்ற சொல்லுக்கான விளக்கம்

அக்ஷரி – சமஸ்கிருதம் – சக்தியின் திருமேனியாக எழுத்து இருக்கும் வடிவம்
அட்சரி – தற்காலத் தமிழ்
அக்கிரி – திருமந்திரத் தமிழ்

பாடல் #1320

பாடல் #1320: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சௌம முதல வெளவொட வெறளவுளுமீறிக
கௌவுளு மையுளுங கலந்தி றீசிறீயென
ரொவவி லெழுஙகிலீ மநதிர பாதமாச
செவவி லெழுநது சிவாய நமவெனனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சௌம் முதல் வௌவ் வோடு ஹௌ உளும் ஈறிக்
கௌ உளும் ஐ உளும் கலந்து இறீ சிறீ என்று
ஓவ் இல் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வில் எழுந்து சிவாய நம என்னே.

பதப்பொருள்:

சௌம் (ஸௌம் எனும் அட்சரம்) முதல் (முதலாக) வௌவ் (ஔம் எனும்) வோடு (அட்சரத்தோடு சேர்த்து) ஹௌ (ஹௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஈறிக் (இறுதியில்)
கௌ (கௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஐ (ஐம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) கலந்து (ஒன்றாகக் கலந்து) இறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) சிறீ (ஶ்ரீம் எனும் அட்சரம்) என்று (என்றும்)
ஓவ் (ஓம் எனும்) இல் (அட்சரத்திலிருந்து) எழும் (எழுகின்ற) கிலீ (க்லீம் எனும் அட்சரம் வரை உள்ள) மந்திர (மந்திரத்தின்) பாதம் (அடியாகவும் கொண்டு) ஆச் (அந்த மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற)
செவ்வில் (சமயத்தில்) எழுந்து (மனதை ஒருநிலைப் படுத்தி) சிவாய நம என்னே (ஒன்பது அட்சரங்கள் உள்ள இந்த மந்திரத்தை சொல்லி சிவாய நம என்று சொல்லுங்கள்).

விளக்கம்:

‘ஸௌம்’ எனும் அட்சரம் முதலாக ‘ஔம்’ எனும் அட்சரத்தோடு சேர்த்து ‘ஹௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் ‘கௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ‘ஐம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து ‘ஹ்ரீம்’ எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்’ எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு ‘ஓம்’ எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற ‘க்லீம்’ எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

பாடல் #1321

பாடல் #1321: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி யாவது நானறி வித்தை
நவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்
நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோத
நவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி யாவது நானறி விததை
நவாககிரி யுளளெழு நனமைக ளெலலா
நவாககிரி மநதிரம நாவுளளெ யொத
நவாககிரி சததி நலநதருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி ஆவது நான் அறி வித்தை
நவ அக்கிரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவ அக்கிரி மந்திரம் நாவுள்ளே ஓத
நவ அக்கிரி சத்தி நலம் தரும் தானே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆவது (சக்கரமாவது) நான் (யான்) அறி (அறிந்து கொண்ட) வித்தை (ஞானக் கலையாகும்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) உள் (சக்கரத்திற்குள்ளிருந்து) எழும் (எழுகின்ற) நன்மைகள் (நன்மைகளை) எல்லாம் (எல்லாம் அடைய வேண்டுமென்றால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) மந்திரம் (இந்த மந்திரத்தை) நாவுள்ளே (நாக்குக்குள்ளேயே வைத்து) ஓத (சத்தமில்லாமல் ஓதினால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சத்தி (இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள்) நலம் (அனைத்து நலங்களையும்) தரும் (கொடுத்து) தானே (தானே அருளுவார்கள்).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது யான் அறிந்து கொண்ட கலைகளாகிய கர்மாக்களை அழித்து பிறவி அறுத்தல், இனியும் கர்மங்கள் சேராமல் தடுத்தல், இறைவனை தமக்குள் உணர்ந்து அடைவது ஆகியவை ஆகும். இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்த சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். அதனை அடைய வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை நாக்கை மட்டும் அசைத்து சத்தமில்லாமல் ஓதினால் இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.

இப்பாடலை திருமந்திர சுவடி எழுத்துக்கள் மற்றும் பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பாடல் #1322

பாடல் #1322: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லா
முரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நலநதரு ஞானமுங கலவியு மெலலா
முரநதரு வலவினை யுமமை விடடொடிச
சிரநதரு தீவினை செயவ தகறறி
வரநதரு சொதியும வாயததிடுங காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நலம் தரும் ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம் தரும் வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம் தரும் தீ வினை செய்வது அகற்றி
வரம் தரும் சோதியும் வாய்த்திடும் காணே.

பதப்பொருள்:

நலம் (நன்மைகள் அனைத்தையும்) தரும் (கொடுத்து) ஞானமும் (இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து) கல்வியும் (உலக அறிவை அறிகின்ற கல்விகள்) எல்லாம் (அனைத்தையும் கொடுத்து)
உரம் (மன பலத்தையும்) தரும் (கொடுத்து) வல் (பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான) வினை (வினைகள் அனைத்தும்) உம்மை (சாதகரை) விட்டு (விட்டு விட்டு) ஓடிச் (ஓடி விடும்படியும் செய்து)
சிரம் (மேன்மையான நிலையைக்) தரும் (கொடுத்து) தீ (இனி மேலும் தீமையான) வினை (வினைகளை எதுவும்) செய்வது (செய்து விடுகின்ற நிலையையும்) அகற்றி (இல்லாமல் செய்து)
வரம் (நினைத்ததை அடையும் வரங்களையும்) தரும் (கொடுத்து) சோதியும் (இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற) வாய்த்திடும் (நிலையும் கிடைக்கப் பெறுவதைக்) காணே (காணலாம்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்களுக்கு பாடல் #1321 இல் உள்ளபடி மூன்று விதமான நன்மைகள் அனைத்தையும் கொடுத்து, இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து, உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தையும் கொடுத்து, மன பலத்தையும் கொடுத்து அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு விட்டு ஓடி விடும்படியும் செய்து, மேன்மையான நிலையைக் கொடுத்து அதன் பயனாக இனி மேலும் தீமையான வினைகளை எதுவும் செய்து விடுகின்ற நிலையையும் இல்லாமல் செய்து, நினைத்ததை அடையும் வரங்களையும் கொடுத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற நிலையும் கிடைக்கப் பெறுவதைக் காணலாம்.

பாடல் #1323

பாடல் #1323: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடு முன்னே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கு
நின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடிடுஞ சககரம வெளளிபொன செமபிடை
கொணடிடு முனனெ குறிதத வினைகளை
வெனறிடு மணடலம வெறறி தருவிககு
நினறிடு சககரம நினைககு மளவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் முன்னே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பதப்பொருள்:

கண்டிடும் (சாதகர் கண்டு அறிந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம்) வெள்ளி (வெள்ளி போன்ற தூய்மையுடனும்) பொன் (பொன் போன்ற பிரகாசத்தோடும்) செம்பு (செம்பு போன்ற உறுதியுடனும்) இடை (மனதிற்கு உள்ளே)
கொண்டிடும் (உள் வாங்கி வைக்கும் போது) முன்னே (இந்த பிறவிக்கு முன்பே) குறித்த (குறிக்கப்பட்ட / முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும்) வினைகளை (அனைத்து வினைகளையும்)
வென்றிடும் (வென்று அழித்துவிடும்) மண்டலம் (இந்த சக்தி மண்டலம்) வெற்றி (ஐந்து புலன்களையும் வெற்றி) தருவிக்கும் (பெறுவதற்கும் வழி கொடுக்கும்)
நின்றிடும் (உறுதியாக நிற்கின்ற) சக்கரம் (இந்த நவாக்கிரி சக்கரமானது) நினைக்கும் (எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ) அளவே (அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1322 இல் உள்ளபடி சாதகர் கண்டு அறிந்த நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்தோடும், செம்பு போன்ற உறுதியுடனும் மனதிற்கு உள்ளே உள் வாங்கி வைக்கும் போது சாதகரின் இந்த பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் அனைத்து வினைகளையும் இந்த சக்கரத்தின் சக்தி மண்டலமானது வென்று அழித்துவிடும். ஐந்து புலன்களையும் வெற்றி பெறுவதற்கும் வழி கொடுக்கும். இந்த நவாக்கிரி சக்கரமானது எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்.