பாடல் #642

பாடல் #642: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

விளக்கம்:

குருவின் அருளினால் அவர் காட்டிய வழியிலேயே மூலாதார அக்கினியை ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தனக்குள்ளேயே அலையும் எண்ணங்களையும் (கேசரி யோகம்) வெளியே அலையும் எண்ணங்களையும் (சாம்பவி யோகம்) கடினத்துடன் ஒன்றாகச் சேர்த்து ஒருமுகப்படுத்தி வைத்தால் சிவகதிப் பேறான எட்டுவித சித்திகளில் எட்டாவது சித்தியான வசித்துவம் (அனைத்தையும் வசியப்படுத்துதல்) கைவரப் பெறும்.

கருத்து: குரு அருளிய வழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால் எட்டாவது சித்தியான அனைத்தையும் வசியப்படுத்தும் நிலையை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.