பாடல் #447: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்
ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவையும் தாங்கிநின் றானே.
விளக்கம்:
அனைத்திற்கும் ஆதியான இறைவனே உயிர்கள் வாழ்வதற்க்காக ஆகாயம் நீர் நெருப்பு காற்று மண் என ஐந்து பெரும் பூதங்களைப் படைத்து அருளினான். அந்த உயிர்கள் வினைகள் முடியும் வரை வாழ்ந்து தன்னை வந்து அடைவதற்காக பல ஊழிக்காலங்களையும் அருளினான். அந்த உயிர்கள் தவமிருந்து தன்னை நாடி வரும் போது அவர்களை எண்ணிலடங்காத பல தேவர்களாகக்கி அருளுகின்றான். இப்படி அனைத்தையும் படைத்த இறைவனே தான் படைத்த அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாத்து அருளுகின்றான்.
