பாடல் #444

பாடல் #444: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குண மேகுண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் வேறு பட்ட பலவித உருவங்களில் ஒன்றாக இருப்பவனும் பூத கணங்களைப் படையாகக் கொண்டவனும் ஆன்மாக்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உலகத்துப் பிறவியாகும். பிறவியைப் பரிசாகக் கொடுத்த மாபெரும் வள்ளலாகிய இறைவன் அந்தப் பிறவியில் உயிர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் வினைகளையும் அடைய வேண்டிப் பலவித குணங்களையும் வைத்து அருளுகின்றான். குணங்களையும் மீறித் தம்மை சிந்திக்கும் அடியவர்களுக்கு அவர்களின் சிந்தனையிலேயே திரிசடையைத் தலையில் தரித்த இறைவன் பேரின்பமாக சேர்ந்து இருந்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசைக்கும் வினைக்கும் பிறவி எடுக்கும்போது அதற்கேற்ற உடலையும் உள்ளத்தையும் குணங்களையும் கொடுத்து அருளும் இறைவன் தன் தலையில் திரித்துச் சூடிய சடைபோல வினைகளால் முற்றும் சூழப்பட்ட ஆன்மாக்கள் அதையும் தாண்டி இறைவனை நினைக்கும் போது அவர்களின் சிந்தனையில் பேரின்பமாக வந்து அருளுகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.