பாடல் #387: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
விளக்கம்:
குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து அதற்கான தன்மைகளை குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார். அதன் மூலம் நல்வினைகளை அருளி சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள். சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்தானது சிவத்துடன் கலந்து மண்ணாகவும் சக்தியோடு கலந்து நீராகவும் இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது. இதில் சிவமும் சக்தியும் மலரில் கலந்திருக்கும் வாசனை போல உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தே இருக்கின்றனர்.
