பாடல் #183

பாடல் #183: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசி பையும் பறக்கின்ற வாறே.

விளக்கம்:

உடலாகிய இந்தப் பையினுள் புலன்களாகிய ஐந்து பெரிய ஊசிகள் இருக்கின்றன. (பார்த்தல் – கண், கேட்டல் – காது, பேசுதல் – வாய், நுகர்தல் – மூக்கு, தொடுதல் – தோல்) இந்த ஐந்து பெரிய ஊசிகளும் தன் விருப்பத்திற்கு பறக்கின்ற பறவைகள் போன்றவை. வெயில் காலத்தில் அங்கும் இங்கும் பறந்து தன் விருப்பம் போல திரியும் பறவைகள் பனிக்காலத்தில் பறந்து செல்ல வழியின்றி குளிரினில் நடுங்கிக்கொண்டு கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதுபோலவே இளமைக் காலங்களில் ஆசைகளில் வயப்பட்டு ஐந்து புலன்களையும் அதன் விருப்பத்திற்கு பறக்க விட்டால் பின்பு வயதாகி முதுமை வந்தபிறகு இறைவனை அடைய எண்ணம் இருந்தாலும் குளிர் காலம் நீண்ட நாள் நீடித்து கூட்டிற்கு உள்ளேயே பறவை இருந்து இறந்து போவது போல ஐந்து புலன்களும் உடலுக்குள்ளேயே அடங்கிக் கிடந்து உடலுக்குள் இருந்த உயிர் பறந்து போய் அதிலிருந்த ஐந்து புலன்களும் முற்றும் செயலிழந்துவிடும்.

கருத்து: உயிரோடும் இளமையோடும் இருக்கும்போது ஆசை செல்லும் வழியில் புலன்களைச் செலுத்தாமல் அவைகளைக் கட்டுப்படுத்தி இறைவனின் மேல் நாட்டத்தை ஏற்படுத்தி அவனை அடையும் வழிகளைத் தேடி அடைய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.