பாடல் #180

பாடல் #180: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தனே.

விளக்கம்:

ஆண்களின் உடல் முன்பு இளமையாக இருந்த காலங்களில் மென்மையான இயல்புடைய பெண்கள் கரும்பை உடைத்து அதன் அடிக்கரும்பிலிருந்து எடுக்கும் சாறு போன்ற இனிப்பாக நினைத்து விரும்பினார்கள். பூக்களின் அரும்பு போன்ற மென்மையான மார்புகளும் ஆலமரத்தின் இலை போன்ற இடையையும் உடைய இந்தப் பெண்களுக்கு இப்போது வயதாகி வலுவிழந்து சுருங்கி இருக்கும் ஆண்களின் உடம்பு எட்டிக் காய் போல கசக்கிறது. அவர்களுக்கு முன்பு கரும்புச் சாறு போல இனித்ததும் இன்று எட்டிக் காய் போல கசப்பதும் ஒரே உடல்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கருத்து : நிலையில்லாத இந்த இளமையான உடலில் கிடைக்கும் சிற்றின்பத்தில் மூழ்கிவிடாமல் என்றும் நிரந்தரமான இறைவனால் கிடைக்கும் பேரின்பத்திலேயே மூழ்கி இருங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.