பாடல் #1806: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
அருளே சகமு மாய பவுதிக
மருளே சராசர மாய மலமே
யிருளே வெளியே யெனும்மெங்கு மீச
னருளே சகளத் தவனன்றி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அருளெ சகமு மாய பவுதிக
மருளெ சராசர மாய மலமெ
யிருளெ வெளியெ யெனுமெஙகு மீச
னருளெ சகளத தவனனறி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அருளே சகமும் ஆய பௌதிகம்
அருளே சரா சரம் ஆய மலமே
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்து அவன் அன்றி ஆமே.
பதப்பொருள்:
அருளே (இறையருளே) சகமும் (உலகமும்) ஆய (அந்த உலகமாக இருக்கின்ற) பௌதிகம் (இயற்கையும்)
அருளே (இறையருளே) சரா (உலகத்தில் உள்ள அசையாத பொருள்களும்) சரம் (உலகத்தில் இருக்கின்ற அசைகின்ற பொருள்களும்) ஆய (அதுவே) மலமே (மும் மலங்களாகவும் இருக்கின்றது)
இருளே (மாயையாகிய இருள்) வெளியே (வெளிச்சமாகிய ஞானம்) எனும் (என்று அழைக்கப்படும்) எங்கும் (எங்கும் இருப்பது) ஈசன் (இறைவனின்)
அருளே (திருவருளே) சகளத்து (அண்டமும் அதிலுள்ள அனைத்து பொருள்களின் வடிவமாக இருக்கின்றது) அவன் (இறைவன்) அன்றி (இல்லாமல்) ஆமே (இவை எதுவுமே இல்லையாம்).
விளக்கம்:
பாடல் #1805 இல் உள்ளபடி ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற இறையருளே உலகமாகவும், அதிலுள்ள உள்ள இயற்கையாகவும், அதிலுள்ள அசையும் அசையாத பொருள்களாகவும், அதிலுள்ள உயிர்களை கட்டி இருக்கின்ற மூன்று விதமான (ஆணவம், கன்மம், மாயை) மலங்களாகவும், அந்த மலத்தினால் உயிர்களுக்கு இருக்கின்ற அறியாமையாகிய இருளாகவும், இறையருள் பெற்ற உயிர்களுக்கு உள்ளிருந்து இறைவன் உணர்த்துகின்ற ஞானமாகிய வெளிச்சமாகவும், அண்டங்களும் அதிலுள்ள அனைத்து பொருட்களின் வடிவமாகவும் இருக்கின்றது. இப்படி இறையருளாக இருக்கின்ற இறைவன் இல்லாமல் இவை எதுவுமே இல்லையாம்.
