பாடல் #1798

பாடல் #1798: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளெங் குமான வளவை யறியா
ரருளை நுகரா ரமுத முகந்தோ
ரருளைங் கருமத் ததிசூக்க முன்னா
ரருளெங் குங்கண்ணான தாரறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளெங குமான வளவை யறியா
ரருளை நுகரா ரமுத முகநதொ
ரருளைங கருமத ததிசூகக முனனா
ரருளெங குஙகணணான தாரறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகரார் அமுதம் உகந்தோர்
அருள் ஐங் கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண் ஆனது ஆர் அறிவாரே.

பதப்பொருள்:

அருள் (இறையருளே) எங்கும் (அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும்) ஆன (வியாபித்து இருக்கின்ற) அளவை (அளவை) அறியார் (யாரும் அறிவதில்லை)
அருளை (இறையருளை) நுகரார் (அனுபவிக்காதவர்கள்) அமுதம் (அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை) உகந்தோர் (மட்டும் அருந்த விரும்புகின்றார்கள்)
அருள் (இறையருளே) ஐங் (ஐந்து விதமான) கருமத்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களின்) அதி (மிக) சூக்கம் (நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை) உன்னார் (நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள்)
அருள் (இறையருளே) எங்கும் (அனைத்தையும்) கண் (பார்க்கின்ற கண்கள்) ஆனது (ஆகவும் இருப்பதை) ஆர் (யாரும்) அறிவாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறையருளே அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபித்து இருக்கின்ற அளவை யாரும் அறிவதில்லை. இறையருளை அனுபவிக்காதவர்கள் அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை மட்டும் அருந்த விரும்புகின்றார்கள். இறையருளே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களின் மிக நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள். இறையருளே அனைத்தையும் பார்க்கின்ற கண்களாகவும் இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள்.

One thought on “பாடல் #1798

  1. Rajendran.R Reply

    வாழ்க வையகம் போற்ற. ஐயா

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.