பாடல் #1797

பாடல் #1797: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

நானறிந் தன்றே யிருக்கின்ற வீசனை
வானறிந் தாரறி யாது மயங்கின
ரூனறிந் துள்ளே யுயிர்க்கின்ற வொண்சுடர்
தானறி யானை பின்னையாரறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானறிந தனறெ யிருககினற வீசனை
வானறிந தாரறி யாது மயஙகின
ரூனறிந துளளெ யுயிரககினற வொணசுடர
தானறி யானை பினனையாரறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் அறிந்து அன்றே இருக்கின்ற ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியானை பின்னை யார் அறிவாரே.

பதப்பொருள்:

நான் (எமக்குள்ளே யான் ஆராய்ந்து) அறிந்து (அறிந்து கொண்டவனாகிய) அன்றே (உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே) இருக்கின்ற (அதற்குள் மறைந்து நிற்கின்ற) ஈசனை (இறைவனை)
வான் (வானுலகத்து தேவர்களும்) அறிந்தார் (இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும்) அறியாது (அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல்) மயங்கினர் (நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள்)
ஊன் (நான் என்கின்ற உடம்பு எது என்று) அறிந்து (அறிந்து கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே) உயிர்க்கின்ற (உயிராக) ஒண் (ஒன்றி இருக்கின்ற) சுடர் (ஒளி வடிவான இறைவனை)
தான் (தமக்குள்ளே ஆராய்ந்து) அறியானை (தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன்) பின்னை (உயிர் போன பின்பு) யார் (எப்படி) அறிவாரே (அறிந்து கொள்ளப் போகின்றான்?).

விளக்கம்:

எமக்குள்ளே யான் ஆராய்ந்து அறிந்து கொண்ட இறைவனே உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே அதற்குள் மறைந்து நிற்கின்றான். வானுலகத்து தேவர்களும் அந்த இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும் அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல் நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள். நான் என்கின்ற உடம்பு எது என்று அறிந்து கொண்டு அதற்கு உள்ளே உயிராக ஒன்றி இருக்கின்ற ஒளி வடிவான இறைவனை தமக்குள்ளே ஆராய்ந்து தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன், உயிர் போன பின்பு எப்படி அறிந்து கொள்ளப் போகின்றான்?

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.