பாடல் #1799

பாடல் #1799: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அறிவி லணுக வறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்த்தி
யறிவது வாக்கி லருளது நல்குஞ்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவி லணுக வறிவது நலகிப
பொறிவழி யாசை புகுததிப புணரததி
யறிவது வாககி லருளது நலகுஞ
செறிவொடு நினறார சிவமாயி னாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவில் அணுக அறிவு அது நல்கி
பொறி வழி ஆசை புகுத்தி புணர்த்தி
அறிவு அது ஆக்கில் அருள் அது நல்கும்
செறிவோடு நின்றார் சிவம் ஆயினாரே.

பதப்பொருள்:

அறிவில் (ஞானத்தின் மூலம்) அணுக (இறைவனை அடைவதற்கு) அறிவு (தேவையான அறிவை) அது (உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன்) நல்கி (கொடுத்து)
பொறி (உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின்) வழி (வழியே) ஆசை (பல விதமான ஆசைகளை) புகுத்தி (உடலுக்குள் புகுத்தி) புணர்த்தி (அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து)
அறிவு (ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான) அது (ஞானத்தை) ஆக்கில் (உயிர்கள் பெற்றுவிட்டால்) அருள் (அதன் பலனாக திருவருளை) அது (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே) நல்கும் (கொடுத்து)
செறிவோடு (அந்த அருளில் உச்ச நிலையை அடைந்து) நின்றார் (நிற்கின்ற அடியவர்கள்) சிவம் (சிவமாகவே) ஆயினாரே (ஆகி விடுவார்கள்).

விளக்கம்:

ஞானத்தின் மூலம் இறைவனை அடைவதற்கு தேவையான அறிவை உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன் கொடுத்து, உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின் வழியே பல விதமான ஆசைகளை உடலுக்குள் புகுத்தி, அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து, ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான ஞானத்தை உயிர்கள் பெற்றுவிட்டால் அதன் பலனாக திருவருளை உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே கொடுப்பான். அப்படி இறைவன் கொடுத்த அருளில் உச்ச நிலையை அடைந்து நிற்கின்ற அடியவர்கள் சிவமாகவே ஆகி விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.