பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.