பாடல் #1780

பாடல் #1780: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பச்சிமத் திக்கிலே வைச்ச வாசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற வப்பொரு
ளுச்சிக்குக் கீழது வுண்ணாவுக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசசிமத திககிலெ வைசச வாசாரியன
நிசசலு மெனனை நினையெனற வபபொரு
ளுசசிககுக கீழது வுணணாவுககு மெலது
வைசச பதமிது வாயதிற வாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பச்சிமம் திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப் பொருள்
உச்சிக்கு கீழ் அது உள் நாவுக்கு மேல் அது
வைத்த பதம் இது வாய் திறவாதே.

பதப்பொருள்:

பச்சிமம் (மேல்) திக்கிலே (திசையிலே) வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) ஆசாரியன் (குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது)
நிச்சலும் (தினமும்) என்னை (தன்னை) நினை (நினைத்துக் கொண்டே இரு) என்ற (என்று அருளிய) அப் (அந்த) பொருள் (பரம்பொருளின் வடிவமானது)
உச்சிக்கு (உச்சந் தலைக்கு) கீழ் (கீழ்) அது (உள்ள இடத்திலும்) உள் (வாய்க்கு உள்ளே இருக்கின்ற) நாவுக்கு (அண்ணாக்குக்கு) மேல் (மேலே) அது (உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில்)
வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) பதம் (திருவடிகளாக) இது (இருக்கின்றது) வாய் (வாய்) திறவாதே (திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.