பாடல் #1788

பாடல் #1788: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானென நீயென வேறில்லை நண்ணுத
லூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானென நீயென வெறிலலை நணணுத
லூனென வுனனுயி ரெனன வுடலநினறு
வானென வானவர நினறு மனிதரகள
தெனென வினபந திளைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என உள் உயிர் என்ன உடல் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

நான் (நான்) என (என்றும்) நீ (நீ) என (என்றும்) வேறு (வேறு வேறாக) இல்லை (இல்லாமல்) நண்ணுதல் (உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும்)
ஊன் (தசைகள்) என (ஆகவும்) உள் (உள்ளே இருக்கின்ற) உயிர் (உயிர்) என்ன (ஆகவும் இந்த இரண்டும் சேர்ந்த) உடல் (உடலாகவும்) நின்று (நின்று)
வான் (ஆகாயம்) என (ஆகவும்) வானவர் (அதில் இருக்கின்ற தேவர்களாகவும்) நின்று (நின்று) மனிதர்கள் (மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல்)
தேன் (மாயையில் மயங்கி அந்த மயக்கமே) என (உண்மை என்று நினைத்து) இன்பம் (சிற்றின்ப) திளைக்கின்ற (ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல் உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல், மாயையில் மயங்கி அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்.

One thought on “பாடல் #1788

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.